Tuesday, April 17, 2012

படிகள் - இருமாத இலக்கிய இதழ்

படிகள் இருமாத இலக்கிய இதழ் பற்றிய இரசனைக் குறிப்பு

பெரும்பாண்மை இனத்தவர்கள் அதிகமாக வாழும் பிரதேசத்திலிருந்து சுமார் 08 வருடங்களாக படிகள் சஞ்சிகை வெளிவருவது நாம் அனைவரும் அறிந்த விடயம். அந்த வகையில் ஈழத்து சஞ்சிகையுலகில் படிகளுக்கென்று ஒரு தனியிடம் உண்டு என்பதை எவறும் மறுக்க முடியாது. படிகள் தனது 30 ஆவது இதழை (ஜனவரி - மார்ச் 2012) அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் காணப்படுகின்ற அனைத்து அம்சங்களும் சிந்தையைக் கவர்வனவாக இருக்கின்றது. படிகளின் அட்டைப் படத்தை மறைந்த பேராசிரியர் ம.மு. உவைஸ் மற்றும் சாகித்திய ரத்னா பேராசிரியர் சபா ஜெயராசா, டாக்டர் ஹிமானா செய்யத் போன்றோர்கள் அலங்கரக்கின்றார்கள். படிகள் தனது ஆசிரியர் தலையங்கத்தில் அநுராதபுரப் பிராந்திய கலை இலக்கிய முழுநாள் விழாவொன்றை நடாத்துவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ் அவர்களின் 16 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புக் கட்டுரைகளாக 1994ம் ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்ட உவைஸ் மணிவிழா மலரில் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் சுருக்கமும், மறைந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் ம.மு. உவைஸ் பற்றி எழுதிய கட்டுரையும் மீளப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாற்றங்களைத் தொடும் தமிழ் சினிமா என்ற தலைப்பில் எங்கேயும் எப்போதும் தமிழ்த் திரைப்படம் பற்றிய தனது பார்வையை எல். வஸீம் அக்ரம் மிகவும் காத்திரமாக முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் தமிழ் நாடு ராமநாத மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஹிமானா செய்யத்தை சுழற்சிகள், கண் திறவாய் போன்ற கவிதை நூல்களின் ஆசிரியரான கலாபூஷணம் டாக்டர் தாஸிம் அஹமது நேர்காணல் செய்திருக்கிறார். இந்த நேர்காணல் மூலம் ஹிமானா செய்யத் அவர்கள் தனது எழுத்துலக, இலக்கிய அனுபவங்களை அழகாக விபரித்திருக்கிறார். நேர்காணல் செய்தவரும் நேர்காணப் பட்டவரும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய இளைஞர் நாடக விழாவில் அநுராதபுர மாவட்ட நாடகத்திற்கு ஏழு விருதுகள் கிடைத்திருக்கிறது என்ற தகவலையும் கண்டுகொள்ள முடிகிறது.

மருதூர் ஜமால்தீனின் உயர்ந்தவன் என்ற சிறுகதை சாதிப் பிரிவினை பார்க்கும் மனித வர்க்கத்தினருக்கு சாட்டையடி கொடுப்பதாய் அமைந்திருக்கிறது. அதே போல் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்து சீவியம் நடாத்திவரும் பெண்ணின் வாழ்க்கையை ஓவியமாய்க் காட்டி நிற்கிறது வெலிப்பண்ணை அத்தாஸின் காய்த்த மரம் என்ற சிறுகதை.

முல்லை முஸ்ரிபா, ஸாருஸ், காத்தான்குடி பௌஸ், நேகம பஸான், துவாரகன், வெற்றிவேல் துஷ்யந்தன் ஆகியோரது கவிதைகளுடன் கே.எம். ஷபீக்கின் மொழி பெயர்ப்புக் கவிதையும் இதழை மேலும் சிறப்பிக்கின்றன.

நிந்தவூர் ஷிப்லியின் தற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய ரசனைக் குறிப்பை சேவியர் தந்துள்ளார். அத்தோடு உமா வரதராஜன் கதைகள் பற்றிய ஓர் அவதானத்தை மன்சூர் ஏ. காதிர் முன்வைத்துள்ளார்.

இலங்கையில் கலைச் சொல்லாக்கம் பற்றிய கட்டுரையை கலாவெல றஸ்மிலா நிஹாரும், அநுராதபுர இலக்கிய அலைகள் என்ற கட்டுரையை திக்வல்லை கமாலும் தந்துள்ளார்கள். மேலும் வால்ஸ்ரீட் போராட்டத்தை சி. குமாரலிங்கம் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

எம்.எம். ரிபாயுடீன், சபுர்தீன், பிரியா கார்;த்திகேயன், எம்.எச்.எம். ரிப்கான் ஆகியோரின் படிகள் பற்றிய நேர் எதிர் எண்ணங்களையும் காண முடிகிறது.

இறுதியில் சாஹித்திய ரத்னா தகைமைசார் கல்வித் துறைப் பேராசிரியர் பற்றிய தனது பார்வையை விரித்திருக்கிறார் திரு கே.எஸ். சிவகுமாரன் அவர்கள்.

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், வாசகர் கருத்துக்கள் என பல்வேறு இலக்கியச் சிறப்புக்கள் அமைந்தவையாக படிகள் தொடந்ர்து வெளிவருவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. படிகள் சஞ்சிகைக் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - படிகள் (இருமாத இலக்கிய இதழ்)
பிரதம ஆசிரியர் - எல். வஸீம் அக்ரம்
முகவரி - 519/G/16, Jayanthi Mawatha, Anuradhapura.
தொலைபேசி - 0783 244 255, 0713 485060.
மின்னஞ்சல் - padihal@yahoo.com
விலை - 60 ரூபாய்

Friday, March 30, 2012

நினைவுப் பொழுதின் நினைவலைகள் - கவிதைத் தொகுதி

நினைவுப் பொழுதின் நினைவலைகள் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

வவுனியாவைச் சேர்ந்த திருமதி சந்திரமோகன் சுகந்தினி எழுதிய நிலவுப் பொழுதின் நினைவலைகள் என்ற கவிதைத்தொகுதி வவுனியா தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. இதில் 53 பக்கங்களை உள்ளடக்கியதாக 27 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இத்தொகுதி சுகந்தினியின் கன்னிக் கவிதைத் தொகுதியாகும். சில கவிதைத் துளிகளும் இதில் உள்ளடங்குகின்றன. அன்னையின் பெருமை, அன்பு, காதல், உறவு, மது, சீதனம், சேமிப்பு, பெண்ணியம், ஆசிரிய மாண்பு ஆகிய கருப்பொருளை மையமாகக் கொண்டு இக்கவிதைகள் புனையப்பட்டுள்ளன. கவிதைக்குப் பொய்யழகு என்று கவிப்பேரரசே சொல்லியுள்ள போதும், பொய்களைப் புறந்தள்ளி வைத்து அன்றாட வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் சந்தித்த, சந்தத்துக்கொண்டிருக்கும், சந்திக்க இருக்கும் சவால்கள், வாழ்வின் யதார்த்தங்கள் என்பவற்றை இலகு நடையில் எவரும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் என் சிந்தைக்கெட்டிய உள்ளத்து உணர்வுகளை கவிதைக்கு உண்மையும் அழகே என்று நீங்கள் யாவரும் உணரும் வகையிலான கவிதைகளாகத் தந்துள்ளேன் என்று நூலாசிரியர் தனதுரையில் குறிப்பிடுகிறார்.



உலகத்தில் தாயன்பைவிட புனிதமானதொரு உறவு இருக்க முடியாது. தாயின் அன்புக்கு வேறு யாருடைய அன்பும் ஈடாகாது. அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம் என்பதில்கூட அன்னைதான் முதன் முதலாக விளித்துக் கூறப்பட்டிருக்கின்றாள். என் அன்னையே என்ற கவிதையில் அன்னையின் பெருமை பற்றி நூலாசிரியர் தனது கருத்தை இப்படி முன்வைக்கிறார்.

ஜயிரண்டு மாதம் கருவறையில்
எனை சுமந்து
அகிலத்தை நான்
அறியவைத்த என் அன்னையே!

ரத்தத்தை பாலாக்கி
முத்தத்தை அன்பு பரிசாக்கி
இன்பமாய் நான் வாழ்வதற்காய்
நீ சுமந்த துன்பங்கள் எத்தனையோ? (பக்கம் 03)

உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும், விஞ்ஞானம் விதைந்துரைக்கச் செய்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்குமான சம உரிமைப் போராட்டம் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. பெண்களின் சமத்துவத்தை சிலரால் அங்கீகரிக்க முடியவில்லை. அதற்கு காரணமாக சொல்லப்படுவது அடுப்பூதுவதற்கு படிப்பெதற்கு என்ற ஆற்றாமையால் உருவான வாசகம்;தான். அவ்வாறான கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது என்பதை காட்டியிருக்கிறது பெண்ணே உன் சிந்தனைக்கு என்ற இந்தக் கவிதை.

பெண்ணே!
கற்கும் வயதில் காதல் வரும்
கடந்து செல்
கல்வி ஒன்றே வேதமென்று
ஓதிச் செல்

அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு என்றால்
விண் ஆண்ட கல்பனாவையும்
மண்ணாளும் கிளரியையும்
ஆதாரம் காட்டிச்செல்... (பக்கம் 05)

விந்தை என்ன? என்ற கவிதை இன்றைய வாழ்வியலை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. இன்றைய விலைவாசி மக்களின் கழுத்தை இறுக்குவதாக மாறியுள்ளது. தினமும் பொருட்களின் விலை ஏறிச் செல்வதனால் ஏழைக் குடும்பங்கள் அன்றாட வாழ்க்கையையே போராட்டத்துடன் கழித்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு குடும்பத்தின் தலைவிதி பொருளாதாரத்தைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது. அவ்வகையில் ஏழையாக பிறந்துவிட்ட காரணத்துக்காக பாடசாலை வாழ்க்கையே பறிபோகுமளவுக்கு சிலரின் வாழ்வு மாறியிருக்கின்றது. அத்தகையதொரு நிலையிலிருந்து மக்களை மீட்க எத்தனை பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் பொது மக்களுக்கு அதற்கான தீர்வுகள் இல்லை.

தீர்வுதேடி தேர்வெழுதினோம்
சுற்றமிழந்து சுயமிழந்து சுமைகளை
தினம் சுமக்கிறோம்..

வட்டமேசை மாநாடுகள் எத்தனையோ
திட்டமிட்டபடி நடந்த போதும்
தீர்க்கப்பட்ட நம் தேவைகள்
எவையேனும் உண்டோ? (பக்கம் 17)

மதுவென்ற அரக்கன் ஆண்களை நன்றாகவே தன் வலைக்குள் வீழ்த்திக்கொண்டுவிட்டான். உடல் அலுப்பாக குடிக்கப் பழகியவர்களும், உல்லாசத்துக்காக குடியை விரும்பியவர்களும் தமது தலையில் தாமே மண்ணள்ளிப் போட்டதற்கு சமானமாகும். ஒரேயடியாக உயிர் கொல்வது விஷம் என்றால், கொஞ்சம் கொஞ்சமாக உயிரைக் கொல்லும் ஒரு வஸ்து மது என்றால் பிழையில்லை. சாராயம் குடித்த பின்பு ஆராய்வதற்கான புத்தியின்றி அல்லல்படுகின்றனர். குடும்பத்துக்குள் பெரிய பிரச்சனைகள் பூதாகாரமாக கிளம்பிவிடுகின்றன. இதுபற்றி உயிர்க்கொல்லி என்ற கவிதையில் கீழுள்ளவாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

உற்றதுணை உயிராய் வந்த பிள்ளைகள்
உடன்பிறப்புக்கள் என்று
உன்னதமான உறவுகள்
ஆயிரமாய் இருக்க
உயிர் குடிக்கும் மதுவை அல்லவா
மகத்துவமென்று நாடுகிறீர் (பக்கம் 23)

சேமிப்பு என்ற கவிதையில் சேமிப்பின் முக்கியத்துவம் பற்றி கூறும் நூலாசிரியர் அதை சேமிப்பது மனிதர்களின் கையில் உள்ள விடயம்தான் என்பதை அழகிய தொனியில் பின்வருமாறு எடுத்துச் சொல்கின்றார்.

வருவாயில் செலவிடப்படாத தொகை சேமிப்பென்பது பொருளியல். சேமிக்கும் கலைதனை சிறுவயது முதல் பழகிடனும் என்பது உளவியல். சேமித்திட சிறந்த இடமாக வைப்பகத்தை தந்தது உலகியல். சேமிப்புக் கணக்கைப் பேணுவது நிதியியல். சேமிப்பு மீளப்பெறுதலை இலகுவாக்கியது இலத்திரனியல். சேமித்தால்தான் செல்வம் சேருமென்பது வாழ்வியல். சேமிப்பது யார் கையில்? அது உன் கையில். (பக்கம் 37)

ஆரம்பத் தொகுப்பென்றாலும் கூட பல விடயங்களையும் தொட்டுக்காட்டியிருக்கின்றார் நூலாசிரியர். அவரது முயற்சியை பாராட்ட வேண்டும். எதிர்காலத்தில் இன்னும் சிறந்த தொகுதிகளை வெளியிட எமது வாழ்த்துக்கள்!!!

நூல் - நிலவுப் பொழுதின் நினைவலைகள் (கவிதை)
நூலாசிரியர் - வவுனியா சுகந்தினி
தொலைபேசி - 0776753874
மின்னஞ்சல் - ளரபயவொiலெ83ளூபஅயடை.உழஅ
வெளியீடு - வவுனியா சுகந்தினி
விலை - 250/=

Tuesday, February 28, 2012

அறுவடைக் காலமும் கனவும் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

அறுவடைக் காலமும் கனவும் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஏ.எப்.எம். அஷ்ரப் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமலை அஷ்ரப், நேஹா, புரட்சி மகன், போன்ற பெயர்களில் கவிதை எழுதி வரும் இவர் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மொழித்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார். இவர் அறுவடைக் காலமும் கனவும் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். 64 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுதியில் 21 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.



இந்நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி செ. யோகராசா அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். இத்தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள், இன்றைய ஈழத்தின் அரசியல் நிகழ்வுகள் பற்றியும் அல்லற்படுகின்ற மக்கள் பற்றியுமான பதிவுகளாகவும் விமர்சனமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட விடயங்களுள், கவிஞரது சொந்த மாவட்டமான திருகோணமலைப் பிரதேசத்தின் சிதைவு கவிஞரைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளமை புலப்படுகிறது என்கிறார்.

மனம் திறந்து சில வார்த்தைகள் என்ற தலைப்பில் நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

சிறுவயதிலிருந்து எனக்கு கவிதையில் ஈடுபாடு உண்டு. பாடசாலைக் காலத்தில் எனது தந்தையான கலைப் பிரியன் பரீட் அவர்களது வழிகாட்டலின் கீழ் அவ்வப்போது சில கவிதைகளை எழுதியிருக்கிறேன். ஈழத்து நவீன தமிழ் கவிதை வளர்ச்சியில் மஹாகவியும், நீலாவணனும் ஓர் சமூக ஒப்பீட்டாய்வு என்ற தலைப்பில் எனது முதுமாணி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டிருந்தபோது எனது கவிதை ஈடுபாடு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. அதன் விளைவுகளுள் ஒன்றுதான் இக்கவிதைத்தொகுதி. ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னோடிகளான மஹாகவி, நீலாவணன் ஆகியோரின் கவிதைகளோடு எனக்கு ஏற்பட்ட பரிச்சயமே தீவிரமான எனது கவிதை வெளிப்பாட்டுக்கு காரணமாகியது. எனது கவிதைகளில் காணத்தகும் உருவ, உள்ளடக்கச் சிந்தனைகளுக்கு அவர்களது செல்வாக்கும் ஒரு காரணமே என்கிறார்.

நான் என்ற கவிதையில் போர்க்கால சூழல் தந்த தாக்கத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. இயற்கையையும், இலக்கியத்தையும் காதலிக்கும் ஒரு சாதாரண கவிஞன், கனவுகள் சுமந்து இன்பக் கற்பனையில் மிதக்க விரும்புகிறான். ஆனாலும் திறந்த வெளிச்சிறையாக உலகம் மாறிவிட்டதால் தனது கற்பனைகள் எதுவும் ஈடேறாமல் செயற்கையான வாழ்வினை வாழ்வதாக திரு. அஷ்ரப் அவர்கள் கீழுள்ள வரிகள் கொண்டு புரிய வைக்க முனைகிறார்.

கொலையும்
கொலைவெறியும் மிகைத்து
மனிதம் மறைந்துவிட்ட - இத்
து(ர்)ப்பாக்கிய தேசத்தில்
கானகத்தில் சிறைப்பட்ட
பறவைகளாய்
சுதந்திர நாட்டின்
அடிமைகளாய் நாம் (பக்கம் 30)

தினம் தோறும் நாம் பலரைச் சந்திக்கிறோம். அவர்களில் எல்லோரும் நம்மோடு ஐக்கியப்பட்டவர்களல்லர். அதே போலதான் காத்தாயி என்ற பாத்திரம். காத்தாயி என்பவள்; பொதுப் பாதையை தினமும் கூட்டித் துப்பரவு செய்யும் பெண் என்பதனை இக்கவிதை மூலம் அறியமுடிகிறது. காலை வேலைகளிலேயே பாதைகளை சுத்தப்படுத்தி பொது மக்கள் அசௌகரியம் அடையா வண்ணம் சூழலை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு காத்தாயிக்குரியது. ஆனாலும் பெரும்பாலானவர்கள் இவ்வாறான தொழிலாளர்களைப் பற்றி எழுதுவதில்லை. திரு. அஷ்ரப் அவர்கள் இந்தக் கவிதையினூடாக காத்தாயியைப் பற்றி எழுதியிருக்கும் சில வரிகள் இதோ

மழையில் நனைந்து வெயிலிற் காய்ந்து
காலை மாலை வேளை மறந்து
வீதிகள் தோறும் விசராய் திரவாள்
காத்தாயி..
அமர்களமான அவளது வாழ்வில்
நோயும் இல்லை நொடியும் இல்லை
நலமாய் வாழ நாங்கள் நாடும்
மாத்திரை இல்லை மருந்தும் இல்லை
பறபறவென்று பறந்து வாழும்
கலியுகர்போலே அவளிடம் - அந்த
காசும் இல்லை கவலையும் இல்லை (பக்கம் 39)

நமது அன்றாட வாழ்வியல் யுத்தமுனை வார்த்தைகளைக் கொண்டே கழிகின்றது. துப்பாக்கிகள், குண்டுகள்தான் எமது உணர்வுகளாக இருக்கின்றன. ஆனால் வெற்றி கிடைப்பதற்காக வேண்டி சிறுவர்களையும், பெண்களையும் சீரழிப்பது தர்மமாகாது. அது போல நிம்மதியைக் குலைத்து எதிரிகளைச் சுட்டு வீழ்த்துவது வீரமும் அல்ல. அப்பாவிகளை அழிக்கக் கூடாது. மாற்றுக் கருத்துக்களுக்கும், மனித உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

இப்பொழுது
போராட்டந்தான்
ஒரு பாசையாக
விளங்குகிறது..
துப்பாக்கிகளும்
ரவைகளும்
குண்டுகளும்
தீவைப்புந்தான்
எமது உணர்வுகளை
வெளிக்காட்டுகின்றன! (பக்கம் 46)

ஏ ஆக்கிரமிப்பாளர்களே எனும் கவிதை சமாதானத்துக்கு தூது விடுவதாய் அமைந்துள்ளது. சமாதானத்தின் சின்னம் புறா. அமைதிக்கு உதாரணம் பூக்கள். இவைகள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பதிலாக இருந்துவிட்டால் நமது தேசத்தின் ஆறாவடு என்றோ நீங்கியிருக்கும். அதைவிட்டுவிடாததன் காரணமாக யுத்ததத்தால் இன்று நாடு சின்னா பின்னமாகியிருக்கிறது. இவ்வாறான கருத்து புலப்பட தனது கவி வரிகளை கீழுள்ளவாறு எழுதியுள்ளார் திரு. அஷ்ரப் அவர்கள்.

இதய வேலிகளைப்
பிய்த்தெறிந்துவிட்டு
உங்கள்
துப்பாக்கிகளில்
ரவைகளுக்குப் பதிலாய்
மலர்ச் சொண்டுகளை
சூடுங்கள்..
ராக்கட்டுகளுக்குப் பதிலாய்
தோள்களில்
புறாக்களைச்
சுமந்து வாருங்கள்..
உங்கள் சொந்த தேசத்தின்
சுதந்திரத்தை
மீண்டும்; தருகிறோம்!
மீட்டுத் தருகிறோம்!! (பக்கம் 50)

மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக புத்தகத்தைத் தந்திருக்கின்ற நூலாசிரியர் திருமலை அஷ்ரப்; அவர்கள் பாராட்டுக்குரியவர். யுத்த கால நிகழ்வுகளை தனது கவிதைகளினூடாக சொல்லியிருக்கிறார். யுத்தத்தால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமய நாமும் வாழ்த்துகிறோம்.!!!

நூல் - அறுவடைக் காலமும் கனவும்
நூலாசிரியர் - திருமலை ஏ.எப்.எம். அஷ்ரப்
தொலைபேசி - 0773081120
மின்னஞ்சல் - ashraff1973@gmail.com
வெளியீடு - பெருவெளி பதிப்பகம்
விலை - 150

கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம்

கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம்

அம்பாறை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற நூலும், இறுவட்டும் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இந்நூலை கலாபூஷணம் கே.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் தனது இரண்டாவது தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். அவர் ஏற்கனவே கனலாய் எரிகிறது என்ற கவிதைத் தொகுதியை புரவலர் புத்தகப் பூங்கா மூலம் வெளியிட்டுள்ளார்.



2010 இல் இலங்கை அரசு இவருக்கு கலைத்துறையில் ஆற்றிய பணிக்காக கலாபூஷண விருது வழங்கி கௌரவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியம் என்ற கவிதைத் தொகுப்பு 27 பக்கங்களில் வெளிவந்திருக்கிது. இத்தொகுதியில் 69 பாடல்வரிகள் அமைந்துள்ளன. 2004 டிசம்பர் 26 ஆம் திகதி நிலத்தைப் பிழந்த சுனாமியில் உயிர்நீத்த உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவருக்கும்... நெஞ்சத்தைப் பிழந்து என்று நூலாசிரியர் தனது சமர்ப்பணத்தை முன்வைத்துள்ளார்.

இவர் 1977 இல் இலக்கிய உலகில் அடிபதித்தவர். இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சியில் இவரது 100க்கு மேற்பட்ட இஸ்லாமிய கீதங்கள், ஒரு சங்கீத ஆசானால் பாடப்பட்டுள்ளன. நிந்தவூர் அல்-அஷ்ரக் உயர்தரப் பாடசாலையிலும், சாய்ந்தமருது முன்பள்ளி கல்வி நிலையம் ஒன்றிலும் இவரது காலை வந்தனப் பாடல்கள் இன்றும் இசைக்கப்படுகின்றன. கே.எம்.ஏ அஸீஸ் இவ்வாறு கவிதைத் துறையில் அகலக் கால்பதித்து நிற்கிறார். ஏழாண்டு சுனாமி அனர்த்த ஞாபகார்த்த நினைவஞ்சலி விழாவில் வெளியாகும் இவரது கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர்க் காவியமும், இறுவட்டு;ம் எதிர்கால சந்ததியினரின் ஆன்மீக சிந்தனைக்கு ஏற்ற அருமருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை என்கிறார் இந்நூலுக்கு உரை எழுதியிருக்கும் கலாபூஷணம் யூ.எல் ஆதம்பாவா அவர்கள்.

எரிமலை குமுறும் இதய ஆழியின் சங்கமத்தில் என்ற தனது உரையில் நூலாசிரியர் அஸீஸ் அவர்கள் கீழுள்ளவாறு கூறுகின்றார். ஊழல்களின் உறைவிடமாகிய உலகின் மானிடனாகப் பிறந்த மதிப்பீடு இன்னும்... இதய ஆழியில் எழும் சுனாமி அலையாக என்னுள் ஓங்கி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. மானிடனாகப் பிறந்ததை விடவும் கல்லாக, ஏன் புல்லாகவேனும் படைக்கப்பட்டிருந்தால் கூட யாருக்காவது பிரயோசனப் பட்டிருப்பேனே என ஆதங்கப்பட்டு இதயத்தால் அழுதுகொண்ட உத்தம நபி (ஸல்) அவர்களின் சத்தியத் தோழர் ஹஸ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் குமுறல் ஆன்மீக வெளிப்பாட்டின் உச்சம் மட்டுமல்ல சமூகப் பார்வையின் உண்மையான சலனம் என்று கூடச் சொல்லலாம். அந்தளவுக்கு அநியாய அரக்கன் கொடிகட்டி அரங்கேற்றிக் கொண்டிருக்கும் மாய உலகின் மானிடனாகப் படைக்கப்படும் முன் எழுந்த ஒரு விமர்சனம் இருபத்து நான்கு மணித்தியாலமும் நினைவிலேயே சதா மூழ்கி உனக்காகவே வாழ்ந்துவரும் எங்களைவிடவா இரத்தம் சிந்தி இறுமாப்போடு உன்னை மறந்து வாழும் ஊழல் பேர்வழிகளையா உலகில் படைக்கப் போகிறாய் என்ற வானவரின் யதார்த்தமான கேள்வியில் எவ்வளவு தூரம் உண்மை பொதிந்திருக்கிறது?... என்ற ஆதங்கம் மானிடனாகப் பிறந்து, பாவத்தில் மூழ்கி தம் வாழ்வை சீரழித்துக் கொள்வோருக்கான உபதேசமாக இருக்கிறது என்கிறார்.

பாடலின் முக்கிய சில அடிகள் இவ்வாறு..

இரண்டாயிரத்து நான்கு மார்கழி மாதம்
இருபத்தி ஆறு அதிகாலை, அவ்வேளை
சரமாரியாய் ஆழி அலைமே லெழுந்து
சாதனை புரிந்தஇவ் வரலாறு கேளீர்.. (பக்கம் 12)

என்ற இவ்வரி ஆழிப்பேரலை நடந்த காலத்தை எமக்கெல்லாம் ஞாபகப்படுத்திப் போகிறது. 2004 டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் ஏற்பட்ட சுனாமி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பாரிய சிதைவுகளை ஏற்படுத்தியதை நூலாசிரியர் வெளியிட்ட இந்நூலிலும், இறுவட்டிலும் தரிசிக்கக் கூடியதாக இருக்கின்றது.

பச்சிளம் பாலகர் முதல் பெண்கள், வயோதிபர்கள் என்று பால், வயது வேறுபாடின்றி கடலலையின் கோரப் பசிக்கு இரையான காட்சிகள் கல்நெஞ்சத்திலும் ஈரத்தை கசியச் செய்யும். அந்தளவுக்கு கட்டிடங்களின் சிதைவுகளாலும், சுனாமி அலையின் வேகமான வீச்சாலும் உயிரிழந்தோர் பலர். உலகம் விஞ்ஞான வளர்ச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் இயற்கையின் சீற்றத்தை நிறுத்த மனிதனால் முடியாது. பின்வரும் பாடல் வரிகள் அதனை நிதர்சனமாக்குகின்றது.

விஞ்ஞானம் வளர்ந்ததென வீறாப்பு பேசும்
வெகுளிகளை மூக்கின்மேல் விரல் வைக்கச்செய்த
அஞ்சாது, அழையாத விருந்தாளியாகி
அலைவந்து ஓடோட விரட்டியது கேளீர் (பக்கம் 12)

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் முகாம்களில் வாழ்ந்துவரும் காட்சியும் தத்ரூபமாக இறுவட்டில் ஒலி(ளி)ப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, மாளிகைக்காடு, நிந்தவூர், பாலமுனை, ஒலுவில் போன்ற ஊர்களில் நிகழ்ந்த இக்கொடூர காட்சிகள் மக்கள் அனுபவித்த துன்பங்களை படம்பிடித்துக் காட்டுகின்றது.

தாய் தந்தையர் யார் என்று அறிய முடியாத சிறார்களை மரபணு ஆய்வு மூலம் கண்டுபிடித்து சேர்த்த சம்பவங்கள்கூட நடந்தேறியிருக்கின்றன. அதற்கான பாடல் வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

அம்மணமாய் சிலபேரை அலையடித்துச் செல்ல
அழு குழந்தை இந்நாளில் உயிரோடு மீள
அம்மா யார்? அப்பா யார்? மரபணுவின் ஆய்வில்
அசல் கண்டு சேர்ப்பித்த அதிசயமே கேளீர் (பக்கம் 13)

நீரிலே மிதந்த உயிரற்ற உடல்களையும், சேதமாகிப் போன ஊர்களையும் ஒருங்கே சுத்தப்படுத்தி உதவியவர்களுக்கும் நூலாசிரியர் இந்நூலினூடு நன்றி தெரிவித்திருக்கிறார்.

அதுபோல கரையோர மக்கள் கதிகலங்கி இருக்கும் போது கடுகளவும் பாதிப்புறாதோர் குறுக்கு வழியில் முன்னேறவும் சுனாமி உதவிசெய்த பரிதாபமும் கண்கூடு. சுனாமியால் வீடு இழந்தவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்தபோதும் அதை சில சதிகாரர் தமக்காகப் பயன்படுத்திக் கொண்ட சோகக் கதைகளும் நிகழ்ந்துள்ளன.

இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு மக்கள் செய்கின்ற பாவங்களே காரணம் என்கிறார் நூலாசிரியர். அவ்வாறு இறைவனை மறந்து செயற்பட்டதால் வந்தவினை தான் சுனாமி என்பதை கீழுள்ள பாடல் வரிகள் மூலம் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

பொய், களவு, காமங்கள், சூது, கொலை, வட்டி
பொறாமை, கோள், வஞ்சகம், போட்டி மனப்பான்மை
வையக வாழ்வினிலே வந்தவினை தானே
வரலாற்றில் நாம் பெற்ற சுனாமியதன் சீற்றம் (பக்கம் 18)

மேற்குறிப்பிட்ட விடயங்களை புத்தக வடிவிலும், இறுவட்டிலும் தந்திருக்கின்ற நூலாசிரியர் கே.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் பாராட்டுக்குரியவர். அதே போல் மிகவும் சிறப்பாக இக்காவியத்தை பாடியுள்ள இசைவாணர் எம்.எம். அப்துல் கபூர் அவர்களுக்கும் எமது பாராட்டுக்கள். இந்த அற்புதமான கண்ணீர்க் காவிய நூலை படிக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.!!!

நூல் - கடற்கோள் சுனாமி அனர்த்த கண்ணீர் காவியம்
நூலாசிரியர் - கலாபூஷணம் கே. எம். ஏ. அஸீஸ்
தொலைபேசி - 067 7913248, 075 2529532
வெளியீடு - சாய்ந்தமருது சமூக நலன்புரி ஒன்றியம்
விலை - 150/=

Wednesday, January 4, 2012

நல்வழி சிறுவர் இலக்கிய கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

நல்வழி சிறுவர் இலக்கிய கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த க. சபாரெத்தினத்தின் சிறுவர் இலக்கியம் சார்ந்த நல்வழி என்ற கவிதைத் தொகுதி 39 பக்கங்களை உள்ளடக்கியதாக அண்மையில் வெளிவந்திருக்கிறது. இவர் ஏற்றமிறக்கம் என்ற சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டிருக்கிறார். இத்தொகுதியில் 35 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கல்வி அமைச்சின் தேசிய நூலக அபிவிருத்தி சபையினால் பாடசாலை மாணவர்களுக்கான நூலகப் புத்தகமாக இக் கவிதை நூல் அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது.



'எட்டு, ஒன்பது வயது தொடக்கம் பதினெட்டு வயது வரையான கல்வி கற்கும் குழந்தைகளின் அறிவு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் நல்ல பல கருத்துக்களை மையமாக வைத்து இலகு நடையில் கவிதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய புற அழுக்காறுகளினின்றும் தமது வாஞ்சையை மாற்றி நன்னெறி மார்க்கத்தை நோக்கிப் பற்றுக்கொண்டு வளர்ந்து வர 'நல்வழி' என்னும் இக் கவிதை நூல் பெருமளவில் உதவும் என நம்புகின்றேன். சோவியத்து பஞ்சவர்ணக் கிளிகள், வாராய் வலம் வருவோம் போன்ற கவிதைகள் உள்ளத்திற்கு மகிழ்ச்சியை ஊட்டுவதற்காகவும், இயல்பு நிலையில் சிறிது அனாயாசமாக சிந்திக்கவும் என்றே இடையிடையே உட்புகுத்தப்பட்டுள்ளன' என்று திரு. சபாரெத்தினம் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

நிலாச்சோறு சாப்பிட்டிராத குழந்தைகள் இல்லை என்று சொல்லலாம். சிறுவர்களுக்கான கதையிலும் சரி, கவிஞர்களின் கற்பனையிலும் சரி, பெண்களை உவமிப்பதிலும் சரி நிலா பிரதான இடத்தை வகிக்கின்றது. நிலாவை உவமித்து எழுதப்பட்ட பாடல்களும் நிறைய இருக்கின்றன. இந்நூலாசிரியரும் நிலவே இறங்கி ஓடிவா (பக்கம் 02) என்ற கவிதையில் நிலா பற்றி கூறியமை பின்வருமாறு அமைகிறது.

வட்ட நிலா வானத்திலே
எட்ட நின்று தோணுது பார்
கிட்ட வரும் நாளினிலே
எட்டி அதைப் பிடித்திடுவேன்

மனிதன் தீயவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்து நல்வழியில் வாழ வேண்டும். தான் உழைப்பது தொடக்கம் அனைத்திலும் நேர்மை இருக்க வேண்டியது அவசியம். பெற்றோர்கள், பெரியோர்கள் நல்வழிகாட்டிகளாக இருந்தால்தான் குழந்தைகளும் நிச்சயமாக சிறந்தவர்களாக காணப்படுவார்கள். பிள்ளைகள் நன்கு கல்வி கற்று நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதை நல்வழி (பக்கம் 03) என்ற கவிதை சுட்டி நிற்கிகிறது.

பற்பல அற்புதம் கற்பிக்கும் விஞ்ஞானம்
பாலகரே நாம் பயின்றிட வேண்டும்
நல்லவை நாடியும் தீயவை போக்கியும்
நற்பணி புரிந்து உயர்ந்திடுவோமே

ஒருவனுக்கு எவ்வளவுதான் பொருள், செல்வம் இருந்தாலும் கல்விச் செல்வம்தான் அவனை மதிப்புடையவனாக ஆக்கும். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதும் இதனால்தான். கல்வியை சரியாக பெறாதவர்கள் நிராதரவான நிலையில் இருப்பார்கள். கல்வியை முறைப்படி பெற்றவர்கள் என்றும் நிம்மதியாக இருப்பார்கள். ஆகவே கல்வியின் முக்கியத்துவம் குறித்து கல்வியை மறக்காதிரு (பக்கம் 07) என்ற கவிதையை தந்திருக்கிறார் நூலாசிரியர் திரு. சபாரெத்தினம் அவர்கள்.

அன்பும் அறனும் நம் சொத்து
அறிவு ஒளியே எம் பேறு
என்றும் எதையும் இழந்தாலும்
நன்றே கல்வி மறக்காதிரு

உலக மக்களில் அநேகர் போலி முகத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இயந்திரத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் பிறரை ஏமாற்றி பிழைப்பதற்காக பசுத்தோல் போர்த்திய புலிகள் எம்மத்தியில் நிறையவே உலா வருகின்றன. அவர்களை கண்டு கொள்வது கூட கஷ்டமான காரியம். அருகிலேயே இருந்துவிட்டு ஆபத்தில் சிக்க வைத்துவிடும் சந்தரப்பவாதிகள் பற்றி சுயரூபம் (பக்கம் 13) என்ற கவிதை பின்வருமாறு சொல்கிறது.

எட்ட நின்றால் இனிப்பிருக்கும்
தொட்டு ரசிக்க மனமிருக்கும்
கிட்ட வந்தால் கசப்பிருக்கும்
பட்டு நொந்தால் பலன் தெரியும்

நல்லோர் போலத் தெரிகின்றார்
நம்பும் படியே பழகுகின்றார்
சூது வாது வஞ்சனையால்
சுயரூபம் காட்டுகின்றார்

சிறுவர் இலக்கியம், சிறுகதை போன்ற துறைகளில் ஆர்வம் காட்டி வரும் திரு. சபாரெத்தினம் அவர்கள் இன்னும் பல காத்திரமான இலக்கிய நூல்களைப் படைத்து இலக்கிய உலகில் நிலைத்து நிற்க வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - நல்வழி (கவிதைத் தொகுதி - சிறுவர் இலக்கியம்)
நூலாசிரியர் - ஆரையம்பதி க. சபாரெத்தினம்
வெளியீடு - வனசிங்க பிரிண்டர்ஸ்
தொலைபேசி - 0652246781
விலை - 70/=

Saturday, December 31, 2011

மகுட வைரங்கள் - கவிதைத் தொகுப்பு

மகுட வைரங்கள் கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

பதுளை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது நித்தியஜோதி அவர்களின் மகுட வைரங்கள் என்ற கவிதைத் தொகுப்பு. கல்வியமைச்;சில் பிரதிக் கல்வி அமைச்சின் ஊடக செயலாலராகவும், அதிபராகவும் கடமை புரிந்துள்ள இவர் தமிழ் மீது கொண்ட பற்றால் தனது கவிதை நூலை வெளிக்கொணர்ந்திருக்கிறார். இணையத் தமிழ் இலக்கிய மன்றம் வெளியீடாக, 76 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 43 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. மலையக மக்களின் வாழ்கையைப் புடம் போட்டுக் காட்டும் ஓரிரு கவிதைகளையும், காதல் கவிதைகளையும், ஆன்மீகம் சார்ந்த சில கவிதைகளையும் இந்நூலில் தரிசிக்கலாம்.

இணைய தளத்தில் இலக்கியங்களைத் தேடி தகவல்களை சேகரித்த அனுபவம் கவிஞர் நித்தியஜோதி அவர்களுக்கு உண்டு. வாழ்க்கை என்னும் இணையப் பத்திரிகையை நெனசல நிலையம் ஊடாக வெளியிட்டு இலங்கை முழுவதும் இணைய வாசகர்களுக்கு இலக்;கியம் வாசிக்கத் தந்தவர். ... நவீன காலத்திற்கேட்ப தகவல் தொழில்நுட்பம், இணையம் என்பவற்றில் ஈடுபாடும், அவற்றின் பயன்பாடும் தமிழ் இலக்கியத் துறையில் பிரயோகிக்கப்பட வேண்டும் என்ற ஆவல் அவரிடம் அதிகமாகவே காணப்படுகிறது என்று தனது வெளியீட்டுரையில் கௌரிசங்கர் பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பூனாகலை பௌர்ணமி கலை இலக்கிய வட்டத்தின் தலைவரான ஆறுமுகம் கலையரசு அவர்கள் இக் கவிதை நூலுக்கு அணிந்துரையை வழங்கியுள்ளார்.



அப்புத்தளை தமிழ் இலக்கிய ஆய்வு மன்றத்தின் செயலாளர் பௌஸர் நியாஸ் தனது பதிப்பாசிரியர் உரையில் இந் நூலிலுள்ள கவிதைகள் தனித்துவம் வாய்ந்தவை. நவீனத்துவம் மிளிர்ந்து கவிதைகள் நடை போடுகின்றன. கவிதைகளின் உருவம், சொல்லாட்சி, உள்ளடக்கம் என்பன ஏனைய கவிஞர்களின் கவிதைகளில் இருந்து இக்கவிஞரை வேறுபடுத்திக் காட்டுகிறது என்கிறார்.

காதல் சொன்ன கண்ணாளன் என்ற கவிதையில் (பக்கம் 18) காதலி தனது உள்ளத்தை கூறியிருக்கிறார். மேலும் கண்களால் கேட்கும் கேள்விகளுக்கு செயலால் பதில் கூறும் தனித்திறமை தனது காதலுக்கு கிடைத்த முதல் மரியாதை என்கிறார் கவிதையின் நாயகியான அந்தப் பெண். மனதினால் தான் மனைவியாகிவிட்டதாக கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

சிங்கார சிரிப்புகள்
நாகரீக மூட்டத்தினுள்ளே
முகம் கழுவும் நாளில்
வெட்கத்திற்கு மட்டும்
மரியாதை தந்தவனே..
உந்தன் வேள்வியால்
நானே
மனைவியாகிறேன்
மன ஊஞ்சலில்...

காதலில் விழுந்தவர்கள் நேரெதிர் மாற்றங்களான விடயங்களை செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறோம். தாம் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கே விளங்காத ஒரு அதிசய உலகத்தில் அவர்கள் இருப்பார்கள். அதே நிலை நீ ... என்றும் நான்... (பக்கம் 46) என்ற கவிதையிலும் நயமாக உரைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக கீழுள்ள அடிகளைக் குறிப்பிடலாம்.

புரிந்து கொண்டும்
பதிலைத் தேடுகின்றாய்..
நானோ...
வினாவைத் தேடுகின்றேன்..

கவிதையில் ஆர்வம் காட்டி வரும் கவிஞர் நித்தியஜோதி அவர்கள் இன்னும் காத்திரமான கவிதைகளைப் படைத்து இலக்கிய உலகில் நிலைத்து நிற்க வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - மகுட வைரங்கள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - கவிஞர் நித்தியஜோதி
வெளியீடு - இணைய தமிழ் இலக்கிய மன்றம்
தொலைபேசி - 0729068724
விலை - 200 ரூபாய்


பதிவுகள் வலைத்தளத்தில் இந்த விமர்சனத்தைப் பார்வையிட...

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=549:2011-12-29-03-54-12&catid=14:2011-03-03-17-27-43

Friday, December 9, 2011

கரை தேடும் அலை - கவிதைத் தொகுதி

கரை தேடும் அலை கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஈழத்தின் இளம் கவிஞர்கள் வரிசையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கிறார் இளம் கவிஞர் புவிலக்ஷி. அழகிய அட்டைப் படத்தோடு தனது இரண்டாவது கவிதைத் தொகுதியாக கரைதேடும் அலை என்ற கவிதைத் தொகுதியை புவிலக்ஷி வெளியிட்டிருக்கிறார். உள்ளக்கிடக்கைகள் என்ற கவிதைத் தொகுதியை இவர் ஏற்கனவே வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பல கவிஞர்களை உருவாக்கிய கிழக்கு மண்ணில் இவர் பெரிய நீலாவணையைச் சேர்ந்தவர். டிசைன் லப் வெளியீடாக, 57 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 55 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் பல கவிதைத் துளிகளும் உள்ளடங்குகின்றன.



நினைவலைகள், மீனவன், நட்பு, இதயச் சிறைக்குள், கவலை, நிகரில்லாதவள், காதல், இதய வாழ்த்து, யாரும் இல்லையே, சுனாமியே, காதல் தேவதை, கலங்காதே, சவால், தூரத்துறவு, புரியாத புதிர், வேதனை, கரை தேடும் அலை, என் அழகே, வாழ்த்துக்கள், உறவு தேடும் உள்ளம், துயரம், அம்மாவே, அழியாத நினைவுகள், ஏழைப் போராளி, நான் இயேசு அல்ல, பலமேது?, இறுதி வரை, நீயும் பறந்திடுவாய், உனக்காக, கவிஞனின் காதலி, சாயம், பிரிவுத் துயர், சிறை வாழ்க்கை, சிரிப்பு, எதிர்பார்ப்பு, இடைவெளி, சுவை, கனவு, கேட்க யாருண்டு, உயர்வு, பிரசவம், கிடைக்குமா?, நிழல் இல்லாத நினைவு, உணர்வாய், துன்பமில்லை, தரிசனம், வசந்தம், உறுதிகொள், அதிஷ்டம், எதற்காக?, ப்ரார்த்தனை, காத்திருப்பு ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

திமிலைத் துமிலன் அவர்கள் கவிதையும் இந்தத் தொகுதியும் என்ற தலையங்கத்தில் கருத்துரையொன்ரை வழங்கியுள்ளார். அம்பிளாந்துறையூர் அரியம் அவர்கள் துன்பத்திலும் இன்பம் காணும் கவிதைகள் என தனது வாழ்த்துரையை வழங்கியுள்ளார். ம. புவிலக்ஷி தனதுரையில் ``இரண்டாவது தொகுப்பாய் வெளியாகும் கரை தேடும் அலையில் என் உணர்வுகள் மட்டுமல்ல சில உண்மைகளும் அலைகளாய்...'' வெளிப்படுகின்றன என்கிறார்.

சுனாமியின் தாக்கம் பற்றி பொதுவாக எல்லா கவிஞர்களும் எழுதியிருக்கிறார்கள். இன்னும் எழுதுகிறார்கள். இத்தனை வருடங்களாகியும் சுனாமியின் பாதிப்புக்கள் இன்றும் எச்சங்களாகவே இருக்கின்றன. சொத்திழந்து சொந்தமிழந்து வாடும் பலர் இன்னும் நிவாரணம் கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சை விட்டபடியும், நிரந்தரமான சுமைகளை நெஞ்சில் சுமந்தபடியும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புவிலக்ஷியின் கவிதையிலும் சுனாமி புகுந்திருக்கிறது. தங்கையை இழந்த தனயனின் சோகம் நினைவலைகள் என்ற கவிதையில் (பக்கம் 01) இவ்வாறாக கவியாக்கப்பட்டிருக்கிறது.

கண் இமைக்கும் நேரமதில்
கை நீட்டிய தங்கையை - உன்
கரங்களால்
அள்ளிக்கொண்டதும்
நான் நிர்வாணமாய்
நின்றதும்...
மாறாத ரணமாய்...


அலைச் சப்தங்களில்
என் உறவுகளின்
அலறல் கேட்பதால்
கடலுக்குச் செல்வதையே
தவிர்த்துவிட்டேன்
இப்போதெல்லாம்...

ஒரு தந்தையின் பரிவோடு வடிக்கப்பட்டிருக்கும் கவலை என்ற கவிதையில் (பக்கம் 05) ஒரு அழகிய சிறுமியின் படம் கவிதைக்கு உயிர்சேர்ப்பதாய் அமைந்திருக்கிறது. அந்தக் கவிதையின் கடைசி வரிகள் பின்வருமாறு அமைந்திருக்கிறது.

என் பிஞ்சு நிலாவின்
உறக்கம் கலைந்ததில்
என் உள் நெஞ்சம்
வேதனையில் வெதும்புகிறது..

காதல் வயப்பட்டாலே மனிதருக்குள் பௌதீக மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை நிரூபிப்பது போல் காதல் (பக்கம் 07) என்ற கவிதையினூடாக புவிலக்ஷி கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார். காதலியின் குரல் ஓசை தன் தலையணைக்குள் கேட்கும் என்பதை கவிநயத்தோடு கூறும் அவரது மொழிநடை இதோ...

தலையணைக்குள்
ஒலிக்கும் உன் காதல்
குரலின் ஓசைக்காய்
விழியுறக்கம் மறந்து
விழித்துக் கிடக்கிறேன்...

காலம் எதையும் மாற்றக் கூடியது. அது மனித மனங்களையும் மாற்றவல்லது. இன்றைய நண்பர்களை எண்ணி உன் இரகசியங்களைச் சொல்லாதே. ஏனெனில் அவன் எதிரியாக மாறலாம் என்றொரு மூத்தொர் வாக்கு உண்டு. அதற்கிணங்க பகைவரையும் நாம் எதிர்க்கக்கூடாது. அவர்கள் ஒருநாளில் நண்பராகலாம் என்ற தத்துவத்தை விளக்குவதாக சவால் என்ற கவிதை (பக்கம் 14) அமைந்திருக்கிறது.

எந்த மனிதனையும் ஓரிரு நாளில் நல்லவர் என நம்பிவிடாதே! அந்த நம்பிக்கையே உன்னை ஏமாளியாக மாற்றலாம்.. கெட்டவர்கள் கூட நல்லவர் தான். கெட்டவர் என்பது நிரூபனமாகும் வரை..

காதலியின் பிரிவு எத்தகைய கொடுமை என்பதையே உணர்வு என்ற கவிதை (பக்கம் 43) சுட்டி நிற்கிறது. உலகத்தில் சந்தோஷம் தரும் அத்தனை விடயங்களும் காதலியின் பிரிவால் அர்த்தமற்றுப் போகின்றன. எல்லா நிகழ்வுகளும் இன்பமாயிருக்கும்போது காதலியின் பிரிவு மாத்திரம் வாட்டுவதாக இக்கவி வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.

புல் சிரித்தது
பூ சிரித்தது..
புல்லின் மீது
பனித்துளி சிரித்தது..

காற்று இனித்தது..
காதல் இனித்தது..
ஏனோ...
அவளுடைய பிரிவு மட்டும் கசத்தது...

உள்ளக்கிடக்கைகள், கரை தேடும் அலை என்ற இரு கவிதைத் தொகுதிகளைத் தந்த புவிலக்ஷி எதிர்காலத்தில் இன்னும் சிறந்த காத்திரமான நூல்களை வெளியிட வேண்டும் என்பதே எமது அவா. அவரது முயற்சி தொடர எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - கரை தேடும் அலை (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - ம. புவிலக்ஷி
வெளியீடு - டிசைன் லப்
முகவரி - 190, ஜோர்ஜ் ஆர். டி. சில்வா மாவத்தை, கொழும்பு - 15.
விலை - 200/=