Monday, April 22, 2024

152. கலாபூஷணம் மானா மக்கீனின் "ஒரு முண்டாசு கவிஞரின் முஸ்லிம் நேசம்" நூல் பற்றிய சிறு கண்ணோட்டம்

 கலாபூஷணம் மானா மக்கீனின்

"ஒரு முண்டாசு கவிஞரின் முஸ்லிம் நேசம்" 

நூல் பற்றிய சிறு கண்ணோட்டம்


வெலிகம ரிம்ஸா முஹம்மத்

எழுத்துத் துறையில் பல தசாப்தங்களாக இலக்கியப் பணி புரிந்து வரும் மானா மக்கீன் அவர்கள் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒருவர்.  இத்துறையில் இவர் 40 க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு  இலக்கியத் துறைக்கு பெரும் பணியாற்றியுள்ளார்.

மகாகவி பாரதியார் மீது அதிக ஈடுபாடுடைய மானா மக்கீன் அவர்கள் "ஒரு முண்டாசுக் கவிஞரின் முஸ்லிம் நேசம்" என்ற பெயரில் மகாகவி பாரதியாரின் முஸ்லிம் நேசம் பற்றிய பல சுவாரசியமான தகவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். 132  பக்கங்களை உள்ளடக்கியதாக மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள  இந்த நூலில் உள்ள அருமையான பல தகவல்களில் சிலவற்றை வாசகர்களுக்காக இங்கு முன்வைக்கிறேன்.

மானா மக்கீன் அவர்கள் தனது  இந்த நூலுக்கான உள்ளடக்கங்களை - ஆரம்பிக்கிறேன், தொடர்கிறேன்,  தொட்டுத் தருகிறேன், ஆய்ந்து பார்க்கிறேன், இந்தியாவைத் தொடுகிறேன், இவர் பார்வையில் இஸ்லாம், பாடல்களில் இஸ்லாமியத் தாக்கம், விஜயாவைக் கண்டுபிடித்த வெங்கடாசலபதி, தமிழ் இதழியலில் புதுசு - புரட்சி, நிறுத்துகிறேன் - நெருடல்களை நேர் செய்து, விடைபெறும் வேளை, உசாத்துணை நூல்கள் ஆகிய 12 தலைப்புகளில் மிகவும் அழகாக முன்வைக்கின்றார்.

முண்டாசுக் கவிஞர், இளசை சுப்பிரமணியன் என்று சொன்னால் புரியாதவர்களுக்குக்கூட மகாகவி பாரதியார் என்றால் சட்டென்று புரிந்துவிடும். மகாகவி பாரதியார் அவர்களை பலரும் பல்வேறு வகையாக விமர்சித்தாலும்கூட அவருடைய மனிதப் பண்பாட்டுடன் கூடிய எழுத்துக்களை யாரும் மறுதலிக்க முடியாது என்று முனைவர் பா. இறையரசன் (தஞ்சாவூர்) தமது 'இதழாளர் பாரதி' (1995 வெளியீடு) என்ற  நூலில் 197 - 198 ஆகிய பக்கங்களில் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் ஓய்வுறக்கத்திலிருக்கும் பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம் (தொண்டி) மற்றும் பேராசிரியர், முனைவர் மு. சாயபு மரக்காயர் (காரைக்கால்) போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே இந்த முண்டாசுக் கவிஞருக்கு முட்டுக் கொடுத்துள்ளார்கள் என்ற தகவலையும் முன்வைக்கின்றார் நூலாசிரியர் மானா மக்கீன் அவர்கள்.

1983 ஆம் ஆண்டுகளில் 'பாரதி கண்ட இஸ்லாம்' என்ற பெயரில் ஒரு சிறு நூல் வெளிவந்ததாக  அறிய முடிகின்றது. இந்த நூலுக்கு மர்ஹும் அப்துர் ரஹீம் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார். நூலாசிரியர் மு.சாயபு மரக்காயர் பொதுவாக இஸ்லாமிய தத்துவங்கள் மீதும், திருநபியவர்கள் மீதும் பாரதியார் பெருமதிப்புக் கொண்டிருந்தார் என்ற தகவல்களை பல சான்றுகளுடன் அந்த நூலில் முன்வைத்துள்ளார். 

அத்துடன் 'பாரதி கண்ட இஸ்லாம்' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதும் அளவுக்கு பாரதியார் இஸ்லாத்தைப் பற்றி எழுதி இருக்கின்றாரா? என்று தனது நண்பர்கள் மிகுந்த வியப்போடு கேட்டதாகக் குறிப்பிட்டு, கதை, கட்டுரை, கவிதை போன்ற எல்லாத் துறைகளிலும் பாரதியார் இஸ்லாத்தைப் பற்றி பேசியிருப்பதாக தான் சுட்டிக் காட்டியதாகக் கூறுகின்றார்.

பாரதியின் இஸ்லாமிய படைப்புகளைப் படித்த போதே உண்மையில் அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்புக் கூடியது என்று குறிப்பிட்டு, சாதி மதங்களுக்கு அப்பால் பாரதியின் மனித நேயமே இந்த 'பாரதி கண்ட இஸ்லாம்' என்ற நூலை எழுதுமாறு தன்னைத் தூண்டியதாக மு.சாயபு மரக்காயர் அவர்கள் தனது நூலின் என்னுரையில் குறிப்பிடுகின்றார்.

மகாகவி பாரதியார் இந்து சமயத்தில் அழுத்தமான பிடிப்பும் ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டவர். ஆயினும் பிற சமய தெய்வங்களை வெறுத்தவர் அல்லர். ஏக இறைவனாகிய அல்லாஹ்வையும் இயேசு கிறிஸ்துவையும் போற்றிப் புகழ்ந்துள்ளார். பாரதியாரின் சமயப் பொதுமைக்கும், சமரச நோக்கிற்கும் அவருடைய பல பாடல்கள் இதற்குச் சான்றாக அமைந்துள்ளன. இவ்வாறான பின்னணியுடைய ஒரு  மகாகவி பாரதியாரைத் தோன்றாத் துணையாக வைத்துக் கொண்டு அவர் மறைந்து கால் நூற்றாண்டைக் கடந்த நிலையிலும் முண்டாசுக் கவிஞருக்கு நானும் ஒரு முண்டாசு கட்ட விழைகின்றேன் என்று மானா மக்கீன் அவர்கள் குறிப்பிடுவது போற்றத்தக்கது. அந்தவகையிலேயே முஸ்லிம் அபிமானிகளுக்குத் தெரியாத மகாகவியின் முஸ்லிம் நேசம் பற்றிய பல தகவல்களைத் திரட்டி தனது பதிவை முன்வைக்கின்றார் நூலாசிரியர் மானா மக்கீன் அவர்கள். முண்டாசுக் கவிஞரின் முழு வாழ்க்கையையும் இங்கு நோக்காமல் தனது இதழியல் வாழ்க்கை மற்றும் மேடைகளில் முஸ்லிம் நேசத்தை எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதே இங்கு எடுத்து நோக்கப்பட்டுள்ளது.

தனது இதழியல் வாழ்க்கையில் பின்வரும் இதழ்களின் மூலம் பாரதியார் அவர்கள் தனது இதழியல் ஆளுமையைப் பதிவு செய்துள்ளார்.


சுதேசமித்திரன் (சென்னை) - 1904, ஆசிரியர்

சக்கரவர்த்தினி (சென்னை) - 1905, ஆசிரியர்

இந்தியா (சென்னை) - 1906, ஆசிரியர்

பாலபாரதா (சென்னை) - 1906, ஆசிரியர்

இந்தியா (புதுவை) - 1908, ஆசிரியர்

விஜயா (புதுவை) - 1909, ஆசிரியர்

கர்மயோகி (புதுவை) - 1910, ஆசிரியர்

தர்மம் (புதுவை) - 1910, ஆசிரியர்

சூரியோதயம் (புதுவை) - 1910, ஆசிரியர்

பாலபாரதா (புதுவை) - 1910, ஆசிரியர்

சுதேசமித்திரன் (சென்னை) - 1916, துணை ஆசிரியர்


சுதேசமித்திரனில் பாரதியார் செய்துள்ள பங்களிப்பை முதன்மையானதாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் 1904 இல் ஆரம்பித்த பாரதியாரின் இதழியல் பணி 1921 இல் முற்றுப் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

ஆரம்பத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்திய இந்திய அரசியலில் இந்து - முஸ்லிம் நிலைமை பற்றியும், பின்னர் இஸ்லாம் பற்றியும், இறைவன் (அல்லாஹ்) பற்றியும், இறைத் தூதர் (நபிகள் நாயகம்) குறித்தும் அவர்கள் தம் அடியார்கள் (மக்கள்) சம்பந்தமாகவும் வழங்கியுள்ள விடயங்களுக்காக ஒரு பட்டியலைக் குறிப்பிட்டு தனது ஆய்வை முன்வைக்கிறார் நூலாசிரியர்.


இதில் "நமது மகமதிய சகோதரர்கள், வேலூர் மகமதிய கான்ஃபரன்ஸ், ஹிந்து - மகமதிய ஒற்றுமை, இந்து - மகமதியர், இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை, அல்லா.. அல்லா.." போன்ற தலைப்பில் அமைந்த பாரதியாரின் கட்டுரை, கதை, கவிதை, பாடல், சொற்பொழிவு ஆகியவற்றின் சாராம்சம் போன்றவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

சுதேசமித்திரனில் (1906 ஆகஸ்ட் 11) இடம் பிடித்த, "நீரோ சக்கரவர்த்திக் கல்லறை மீது ஓர் புஷ்பம்" என்ற தலைப்பில் அமைந்த பின்வரும் வரிகள் இங்கு கவனிக்கத்தக்கது.  "இந்தியா" ஹிந்துவுக்கு மட்டிலும் சொந்தமில்லை. மகமதியனுக்கும் சொந்தமே. அநாகரீக இடைக் காலங்களில் நமது மூதாதையர்கள் சண்டையிட்டுக் கொண்டதாக அன்னிய தேசத்துப் பொய் சரித்திரக்காரர் கூறும் கதைகளை நாம் கருத வேண்டியதில்லை. பொது மாதாவாகிய பாரத தேவியின் பொது நன்மையை கவனிக்க வேண்டுமேயல்லாமல் ஜாதி, மத, குல, பேதங்களைப் பாராட்டி தேசத்தை மறக்கும் மனிதனை பாரத தேவி சர்வ சண்டாளராகவே கருதுவாள்.

முண்டாசுக் கவிஞரின் "இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை" என்ற தலைப்பில் அமைந்த சொற்பொழிவின் சாராம்சம் இந்த நூலின் 20 ஆம் பக்கம் 30 ஆம் பக்கம் வரை இடம் பிடித்துள்ளது. அந்த சொற்பொழிவில் ஒப்புவிக்கப்பட்ட கருத்துக்களை அவதானிக்கும் போது முண்டாசுக் கவிஞருக்கு முகமது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது மிகுந்த பற்றிருந்ததை அறிய முடிகிறது. இதன் முழுமையான சொற்பொழிவு இன்னும் அற்புதமாக இருந்திருக்கும் என்று குறிப்பிடுக்கின்றார் நம் நூலாசிரியர்.

முண்டாசுக் கவிஞர் பாரதியார் தமது துணைவியாரின் ஊராகிய கடையத்தில் தங்கிய காலத்தில் நெல்லை மாவட்டத்து பொட்டல் புதூரிலே முஸ்லிம்களின் ஏக இறைவன் அல்லாஹ்வைப் பற்றிய அருமையான பாடல் ஒன்றைப் பாடிய பின்னர் நிகழ்த்திய சொற்பொழிவின் சாராம்சம் அன்றைய சுதேசமித்திரனில் இடம்பெற்றிருந்தன.

பிற்காலத்தில் பலராலும் தொகுக்கப்பட்ட பாரதியாரின் கவிதை நூல்களில் மூன்று சரணங்களைக் கொண்ட இந்தப் பாடல் முழுமையாக இடம்பெறவில்லை. 1920.06.24 இல் வெளிவந்த சுதேசமித்திரன் இதழில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர் 'கதாரத்னாகரம்' 1920 ஜுலை இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. 

மூன்று சரணங்களைக் கொண்ட பாரதியாரின் "அல்லா" பாடலை வாசகர்களின் இரசனைக்காக இங்கு பதிவிடுவது பொருத்தம் என்று நினைக்கின்றேன்.


(பல்லவி)

அல்லா.. அல்லா.. அல்லா!


சரணம் 01

பல்லாயிரம் பல்லாயிரங் கோடி கோடி யண்டங்கள் 

எல்லாத் திசையினுமோ ரெல்லையில்லா வெளிவானிலே

நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன் 

சொல்லாலு மனத்தாலுந் தொடவொணாத பெருஞ்சோதி 

(அல்லா)


சரணம் 02

கல்லாதவ ராயினு முண்மை சொல்லாதவ ராயினும் 

பொல்லாதவ ராயினுந் தவமில்லாதவ ராயினும் 

நல்லாருரை நீதியின்படி நில்லாதவ ராயினும் 

எல்லோரும் வந்தேத்து மளவில் யமபயங்கெடச் செய்பவன்

(அல்லா)


சரணம் 03

ஏழைகட்கும் செல்வர்கட்கும் இரங்கியருளும் ஓர்பிதா 

கோழைகட்கும் வீரருக்குங் குறைதவிர்த்திடும் ஓர்குரு 

ஊழி, யூழி, அமரராயிவ் வுலகின் மீதிலின்புற்றே 

வாழ்குவீர் பயத்தை நீக்கி வாழ்த்துவீர் அவன் பெயர் 

(அல்லா)


- சுதேசமித்திரன் 1920.06.24

மேலே குறிப்பிடப்பட்ட மூன்று சரணங்களிலும் முதலாவது சரணமானது முண்டாசுக் கவிஞருக்கு இருந்த அல்குர்ஆன் பற்றிய அறிவை வெளிக்காட்டுவதாக அமைகின்றது. அதாவது அல்குர்ஆனில்  சூரா அல்அன்பியாவில் (நபிமார்கள்)  உள்ள 33 ஆவது வசனம் பின்வரும் கருத்தைக் கூறி நிற்கின்றது.

"இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன" (அல்குர்ஆன் - 21 : 33)

மேலுள்ள அல்குர்ஆன் வசனக் கருத்தையே பாரதியாரின் அல்லா என்ற பாடலில் உள்ள முதலாவது சரணம் வெளிப்படுத்துவதாக அமைகின்றது. இந்தப் பாடல் மூலம் பாரதியார் அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழக முஸ்லிம் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார்.

நூலின் 39 முதல் 51 ஆம் வரையான பக்கங்களை பாரதியார் அவர்களின் முஸ்லிம் கதாபாத்திரங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட "ரயில்வே ஸ்தானம்" என்ற சிறுகதை அலங்கரித்துள்ளது. இந்தச் சிறுகதையானது 1920.05.22 ஆம் திகதியில் பிரசுரமான சுதேசமித்திரன் இதழில் பிரசுரம் கண்டுள்ளது. 

இந்தக் கதையில் கதாநாயகன் ஏக காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகளைத் திருமணம் செய்வதனால் வரும் பிரச்சினைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய கொள்கைக்கு முற்றிலும் முரணான ஒரு விடயமாகும். அதாவது சட்டப்படியாக மணம் புரிந்த மனைவி உயிருடன் இருக்கையில் அவளது சகோதரிகளை ஏக காலத்தில் திருமணம் செய்வது இஸ்லாத்தில் ஹராமான (கூடாத) விடயமாகும். இஸ்லாமிய நண்பர் ஒருவர் மூலம் பின்னர் அதுபற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்ட பாரதியார்,  தான் எழுதிய கதையில் கருத்துப் பிழையொன்று இருப்பதாக சுதேசமித்திரனில் குறிப்பொன்றை எழுதி, ஒரே குடும்பத்துப் பெண்கள் என்ற விபரத்தை மாற்றி தன் இனத்தைச் சேர்ந்த மூன்று பெண்களைத் திருமணம் செய்ததாகத் திருத்தி வாசிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொண்டார்.

அதேபோல் பாரத நாட்டில் ஹிந்துக்களும் மகமதியர்களும்  பகைமைகளற்று சினேகபூர்வமாக சகோதர மனப்பான்மையுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதையும் பாரதியார் தனது எழுத்துக்களின் மூலம் மிகவும் உறுதியாக முன்வைத்தார். அத்துடன் மகமதியர்களுக்கு இது அன்னிய தேசமன்று. அவர்கள் இங்கே இன்றைக்கு நேற்றைக்கு வந்து குடியிருக்கும் ஜனங்கள் இல்லை. இந்நாடு ஹிந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ, அவ்வளவுக்கு மகமதியர்களுக்கும் சொந்தம் என்று குறிப்பிட்டுள்ளார். "இந்தியா" இதழில் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமை பற்றி மேலும் வலியுறுத்த விரும்பிய பாரதியார், தமிழ் ஆண்டு - மாதம் - நாள் ஆகியவற்றுடன் முஸ்லிம் ஆண்டு - மாதம் - நாள் முதலியவற்றையும் முதன் முதலாக ஷஷஇந்தியா|| இதழில் பொறித்து இதழியல் துறையில் அதிசயம் புரிந்தார். எனவே இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமை எனும் கயிற்றைப் பிடித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் பெரும் விருப்புடையவராகவே முண்டாசுக் கவிஞர் திகழ்ந்துள்ளார்.

இன்றைய பரந்த பாரதத்திலும் இலங்கையிலும் வாழுகின்ற இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு தாய் மக்களாக இணைந்து வாழ கரம் கோர்த்து விடுவார்களேயானால் அதுவே நம் நூலாசிரியரின்  பேனாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று குறிப்பிட்டு இந்த நூலை நிறைவு செய்கின்றார் மானா மக்கீன் அவர்கள்.

இதுவரை நான் வாசித்த இலக்கிய நூல்கள் பலவற்றில் மானா மக்கீன் அவர்களின் "ஒரு முண்டாசுக் கவிஞரின் முஸ்லிம் நேசம்" என்ற இந்த நூல் என்னை பிரமிக்கச் செய்த ஒரு நூல் என்றுதான் குறிப்பிட வேண்டும். இவ்வகையான நூல்கள் இக்காலத்தில் இன ஒற்றுமையை வலுப்படுத்தத் தேவையான ஒரு நூலாகவே அமைந்துள்ளது.  மறுபதிப்புச்  செய்ய வேண்டிய தேவையையும் இந்த நூலுக்கு இருக்கிறது. நூலாசிரியர் அதனையும் கருத்திற்கொள்வார் என்று நினைக்கின்றேன். நூலாசிரியர் நீடூழி வாழ்ந்து, இன்னும் பல காத்திரமான இலக்கிய நூல்களைத் தர வேண்டும் என்று பிரார்த்தனையுடன், எனது வாழ்த்துக்களைத் தெரிவித்து நிறைவு செய்கின்றேன்!!!


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


151. தர்காநகர் மர்ஹுமா ஷஹ்னா ஸப்வானின் "எரியும் நட்சத்திரம்" - கவிதை நூல் விமர்சனம்

 தர்காநகர் மர்ஹுமா ஷஹ்னா ஸப்வானின் 

"எரியும் நட்சத்திரம்" - கவிதை நூல் விமர்சனம்


வெலிகம ரிம்ஸா முஹம்மத் (பன்னூலாசிரியர்)


சங்க காலத்தில் தமிழ் இலக்கிய மரபானது செய்யுள் இலக்கியமாகப் படைக்கப்பட்டு வந்துள்ளன. அக்கால புலவர்களின் கவிதைகள் கருத்துச் செறிவும் சொற் செறிவும் மிக்கனவாகக் காணப்பட்டன. அதன்பின்னரான காலப்பகுதிகளில் மரபுக் கவிதை, வசன கவிதை, புதுக் கவிதை, நவீன கவிதை, பின் நவீனத்துவக் கவிதை, தன்முனைக் கவிதை, ஹைக்கூ கவிதை என படித்தரங்கள் மாற்றமடைந்து வந்துள்ளன. 

செய்யுள் இலக்கியங்கள் கற்றோருக்கு மாத்திரமே புரிந்த காலம் மாறி பாரதியாரின் காலத்தில் எழுதப்பட்ட உரைநடைக் கவிதைகள், பெரும்பாலான மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. பிற்காலத்தில் பிரதேச மொழி நடையில் எழுதப்படும் படைப்புகள், வாசிப்பின் மீதுள்ள ஆர்வத்தைத் தூண்டியது எனலாம். 

தென் மாகாணத்தைப் பொறுத்தளவில் எழுத்து மொழிக்கும், பேச்சு மொழிக்கும் பாரியளவு வித்தியாசங்கள் காணப்படுகின்றது. சில சமயங்களில் பேச்சினிடையே சிங்களச் சொற்களும் ஊடுருவிக் காணப்படுகிறது. படைப்பாக்கத்தின் போது பிரதேச மொழி வழக்கை வாசகர்கள் விரும்புவதால் படைப்பாளர்கள் அதில் அதிக கவனம் செலுத்தலாயினர். அதேபோல தென்னிலங்கைப் படைப்பாளிகள் கவிதைகள் மீது அதிக முனைப்புக்காட்டி வந்துள்ளனர். இதில் ஆன்மீகம் சார்ந்த அதாவது பக்தி இலக்கியங்களே மிகவும் முக்கியத்துவம் பெற்றுக் காணப்பட்டன.

தென்னிலங்கை என்ற வரையறைக்குள் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களே உள்ளடங்குகிறது. எனினும் மறைந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் 'ஈழத்து தமிழ் இலக்கியத் தடம்|| என்ற தனது நூலில் தென்னிலங்கை என்பது இலக்கிய ரீதியாக பாணந்துறை முதல் திக்குவல்லை வரையான பிரதேசம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கையின் முன்னோடிக் கவிஞர்கள் என்று நோக்கும் போது அதில் மிக முக்கியமான கவிஞர்களாக கவிஞர் ஏ. இக்பால் மற்றும் திக்குவல்லைக் கமால் ஆகியோர்களைப் பிரதானமாகக் குறிப்பிடலாம்.

ஆக்க இலக்கியங்களைப் படைப்பதிலும் அதனை இரசிப்பதிலும் மிகவும் சுருங்கிப்போன வாசிப்பு வட்டத்தைக் கொண்டுள்ள இன்றைய காலகட்டங்களில் அதிலும் பல்வேறு வகையான வேலைப் பளுக்களுக்கு மத்தியிலும் பெண்களின் ஈடுபாடு இத்துறையில் மிகவும் குறைவாகவே இருந்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலைகளில் இலக்கியத் துறையில் சிறப்பாகத் தடம் பதித்து தனக்கென்று ஒரு தனியான இடத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்கு பாரிய அர்ப்பணிப்புகள் தேவைப்படுகின்றது. இத்துறையில் தொடர்ந்து இயங்குவதாலேயே நிலைத்து நிற்க முடியும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இன்று வெளியிடப்படுகின்ற  'எரியும் நட்சத்திரம்'  கவிதை நூலாசிரியர் தர்காநகர் ஷஹ்னா ஸப்வானும் தென்னிலங்கையைச் சேர்ந்தவராகின்றார். இவர் சிறுவயதிலிருந்தே இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதை அவருடைய  'எரியும் நட்சத்திரம்'  கவிதைத் தொகுதி மூலம் தெரிந்து கொண்டேன். பாடசாலைக் காலத்திலிருந்தும் அதற்குப் பின்னரான காலப் பகுதியிலிருந்தும் இவருக்கு கவிதைத் துறை மீது ஒரு அலாதியான ஈடுபாடு இருந்திருக்கிறது. அத்துடன் இத்துறையில் தனது பெயரையும் பதிக்க வேண்டும் என்பதுவும் ஷஹ்னா ஸப்வானின் ஆசையாக இருந்திருக்கிறது. இவருடைய இந்த விருப்பத்தின் வெளிப்பாடாகவே  'எரியும் நட்சத்திரம்' என்ற இந்தக் கவிதைத் தொகுதி 113 பக்கங்களை உள்ளடக்கியதாக இன்று வெளிவருகிறது.

இந்தப் பெண் கவிஞர் எங்கள் எல்லோரையும் விட்டு மறைந்துவிட்டார். இனி எங்களுக்கென்ன என்று நினைக்காமல் இவருடைய கவிதைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தெடுத்து, இவருடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் வகையில் 'இளம் தாரகையின் தூரிகை' என்ற குழும உறுப்பினர்களான இவருடைய நண்பர் குழாம் இந்தக் கவிதை நூலை வெளியிட்டு வைப்பது பெரும் மகிழ்வுக்குரியது, பாராட்டுக்குரியது. இந்தப் பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த  களுஃ ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபரான, நூலாசிரியரின் தந்தை ஏ.எச்.எம். ஸப்வான் அவர்களும் பாராட்டுக்குரியவர்.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள வலம்புரி கவிதா வட்டத் தலைவர் கவிஞர் என். நஜ்முல் ஹுசைன் அவர்கள் நூலாசிரியர் ஷஹ்னா ஸப்வான் பற்றிக் குறிப்பிடும் போது,

விடை கொடுத்துச் சிறகடித்தாள் ஷஹ்னா ஸப்வான்..

கவிதை நடைக்குள்ளே சிறைப்பிடித்துத் தொட்டாள் தொடுவான்..

என்று குறிப்பிட்டு நூலாசிரியரின் சில கவிதைகளை நயந்து தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். நஜ்முல் ஹுசைன் அவர்களின் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பது போல எம்மை விட்டும் பிரிந்து சென்ற, அதுவும் இளமையில், அதுவும் திருமணம் முடித்து ஆறே மாதங்களில் இந்த உலகிற்கு விடை கொடுத்த இந்தப் பெண் கவிஞர் ஷஹ்னா ஸப்வான் அவர்களை நினைக்கும் போது உண்மையில் எனது மனதும் கனத்தே போகின்றது. மட்டுமல்லாமல் இந்தக் கவிதை நூலினூடாக கவிதை உலகில் நிறையச் சாதிக்க வேண்டும் என்ற தனது ஆசையைப் பதிவு செய்து ஷஹ்னா ஸப்வான் எனது விழிகளிலும் கண்ணீரைத் தேங்க வைத்துவிட்டார்.

அடுத்து தமிழ் நெஞ்சம் சஞ்சிகையாசிரியர் அமீனின் 'மனதினிலே நிலைத்திருப்பாய் நீண்டு' என்ற தலைப்பில் அமைந்த நீண்ட கவிதை வாழ்த்து இந்த நூலை அலங்கரிக்கின்றது. அந்தக் வாழ்த்துக் கவிதையின் சில பகுதிகள் இதோ:-

போட்ட விதை எல்லாம் புவியில் பரிணமித்து

பாட்டு மலராக பவனி வர - ஏட்டிலுள்ள

சங்க மொழி வாசமுன்னை சந்திக்கத் தேடியதே

எங்கு நீ சென்றாய் இயம்பு?


காயத்தைத் தந்து  கடந்தமையால் பாட்டாலுன்

நேயத்தைத் தந்து நிறைந்தமையால் - நீயளித்த

பங்கில் உனை வையும், பாராட்டும் சப்தத்தை

எங்கிருந்து கேட்பாய் இயம்பு?

என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு எம் மனதையும் கவலையில் ஆழ்த்துகின்றார் தமிழ்நெஞ்சம் அமீன் அவர்கள்.

தர்காநகர் களு/ அல் ஹம்றா மகா வித்தியாலய முன்னாள் அதிபர் எம்.இஸட்.எம். நயீம் அவர்கள், அல் ஹம்றாவின் 'பழைய மாணவி' ஷஹ்னா ஸப்வான் என்று குறிப்பிட்டு தனது ஆசியுரையை வழங்கியுள்ளார். அதில் ஷஹ்னா ஸப்வான், கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் தனது ஓய்வு நேரத்தை முழுமையாகக் கவிதை புனைவதில் ஈடுபடுத்தி வந்தார். அவரது கவிதைகள் புதுமையும் ஆழமான கருத்துக்களையும் கொண்டு விளங்கின. இவர் தேசிய மட்டத்திலான கவிதைப் போட்டிகளில் பங்கு கொண்டு பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது என்று கூறி புகழாரம் சூட்டியுள்ளார்.

மற்றும் ஒரு வாழ்த்துரையை  நூலாசிரியருக்கு கற்பித்த ஆசிரியையான தர்காநகர் களு/ அல் ஹம்றா மகா வித்தியாலயத்தின் உப அதிபர் எம்.எம்.எஸ். பரூஸா வழங்கியுள்ளார். ஷஹ்னாவின் முதலாம், இரண்டாம் தர ஆசிரியையாய் கற்பித்த அவர் - அந்தப் பிஞ்சுப் பூவின் இதழ் விரல்களைப் பற்றிப் பிடித்து அச்சரம் பழக்கிய ஞாபகம் என்  உள்ளத்திலே இன்றும் ஆழப் பதிந்துள்ளது. என் உள்ளத்தோடு ஒன்றித்த ஷஹ்னாவின் கவிதைகளும் கவிதைகள் வெளிப்படுத்திய கருத்துகளும் உலகமே படித்து வியந்தபோது இரண்டாம் தாயாய் நானும் வியந்து  பெருமிதம் அடைந்தேன் என்கிறார்.

அடுத்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளரும் ஆசிரியையுமான ஸில்மியா ஹாதி அவர்களும் ஒரு வாழ்த்துரையை வழங்கியுள்ளார். அதில். 'இது இலை மறைத்த காயல்ல. மரம் மறைத்த வித்து. எழுந்து ஒவ்வொன்றாய் பளபளக்கும் பச்சைத் தளிர்களை உலகுக்கு நீட்டி, அழகு காட்டி, துளிர்விடும் போது தானா உலர்ந்து போக வேண்டும்? காலடியில் வைரங்கள் ஒளிர்ந்திருப்பது பூமியை மிதித்துச் செல்லும் எங்களுக்கு தெரியாமலே போயிற்றே' என்று ஆதங்கப்படுகின்றார்.

'எரியும் நட்சத்திரம்' கவிதைத் தொகுதியின் உள்ளடக்கமானது - எழுத்துலகம், மனதோடு கொஞ்சம், நேசம், குடும்பம் ஆகிய நான்கு உப தலைப்புக்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. நூலில் இடம்பிடித்துள்ள இவருடைய கவிதைத் தலைப்புகளைப் பொதுவாக நோக்கும் போது காலத்துக்குத் தேவையான, யதார்த்தமான பாடுபொருள்களைப் பிரதிபலிக்கின்ற பல்வேறு வகையான தலைப்புகளில் அமைந்துள்ளது. 

'எரியும் நட்சத்திரம்' ஷஹ்னா ஸப்வானின் கன்னிக் கவிதைத் தொகுதியாகும். இந்த நூலிலுள்ள பல கவிதைகள் இது கன்னிக் கவிதைத் தொகுதி என்பதைப் பறை சாற்றி நின்றாலும்கூட சில கவிதைகள் கவிதைக்கேயுரிய இலக்கணங்களைப் பின்பற்றி கனதியான முறையில் சிறப்பாக அமைந்துள்ளது என்று உறுதியாகக் கூறலாம். அகம் சார்ந்த மன உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற கவிதைகளைத் தேடி வாசிப்போர் நிச்சயமாக தர்காநகர் ஷஹ்னா ஸப்வானின் கவிதைகளையும் வாசிக்க முடியும்.

இவர் சில கவிதைகளினூடாகத் தனது மனப்பாரங்களை மொழிபெயர்க்கிறார்.. தனது எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசைகளையெல்லாம் வெளிப்படுத்தி இருக்கின்றார்.. அத்துடன் சக மனிதர்கள் மூலமாக தனக்குக் கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கின்றார்.. இயற்கை வனப்பையும் கவிதைக் கண்களால் பார்த்து இரசிக்கிறார்.. சிலவற்றில் வாழ்க்கைத் தத்துவங்களையும் முன்வைக்கிறார்.. மறுபக்கம் தனது தாயாருக்காக கண்ணீரும் வடிக்கின்றார்.. 

மொத்தத்தில் தமிழின் சிறப்பு, மானிட அவலம், நாட்டு நடப்பு, அனுபவப் பாடம், இயற்கையின் வனப்பு, போலி முகம், வாழ்வின் யதார்த்தம், ஆன்மீகம், துரோகம், நட்பின் தூய்மை, பெண்மையின் கண்ணியம், உணர்வுகளின் வெளிப்பாடு, தாய்ப் பாசம் போன்ற கருப்பொருட்கள் இவருடைய கவிதைவெளியை வியாபித்து நிற்கின்றன.

இனி இவருடைய கவிதை நூல்களில் விரிந்து கிடக்கும் கவிதைகள் பலவற்றில் சில கவிதைகளை எடுத்து நோக்குவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

பக்கம் 01 இல் இடம்பிடித்துள்ள 'எழுதுகோல்' என்ற முதலாவது கவிதை ஒரு மனிதனின் சிந்தனை சக்தியை எழுத்து வடிவமாக மாற்றும் எழுதுகோலின் பங்களிப்பு பற்றி பேசி நிற்கின்றது. ஒரு கருவியாக எழுதுகோல் காணப்பட்டாலும் அதன் மைத்துளிகள் மனதின் பிரதிபலிப்பாக இருப்பதுவே நிதர்சனமாகின்றது.  


தலை குனிந்து எழுதும்

எழுதுகோலினால் தான்..

இங்கு பலரின் வாழ்க்கை  

தலை நிமிர்ந்து நிற்கின்றது..


சில நேரங்களில் அவரவர் வரிகள்

அவரவருக்கே ஆறுதலாகின்றன..

எழுத்தாளனின் எழுதுகோல் சிந்திய

எழுத்துக்கள் ஒரு பொழுதும் திகட்டாது..


கையெழுத்தை சீராக்கி

தலையெழுத்தை உயர்வாக்கி

மையெழுத்தை அழகாக்கும்

அகிலத்தையயே சிறப்பிக்கும்..


என்ற கவிஞரின் வரிகள் மூலம் 'எழுதுகோல்|| பற்றிய தனது கருத்தைப் பதிவு செய்கின்றார்.


அடுத்ததாக பக்கம் 7 இல் அமைந்துள்ள 'யாவும் எனக்கு கவிதை தான்' என்ற கவிதையினூடாக நமது கவிஞர் எல்லாவற்றையும் தனது கவிதைக் கண் கொண்டு பார்க்கின்றார்.


பாரதி தொட்டு அத்துனையுமே இங்கு எனக்குக் கவிதை தான்..

காற்று, மரங்கள், பூக்கள் இவையெல்லாம் எனக்குக் கவிதை தான்..

சுட்டெரிக்கும் சூரியனும் எனக்கு கவிதை தான்..

கலைந்து செல்லும் மேகங்களும் எனக்குக் கவிதை தான்..

இரவில் எரியும் விண்மீன்களும் எனக்குக் கவிதை தான்..

இரவை துவைக்கும் விடியலும் எனக்குக் கவிதை தான்..


என்று இவர் அனைத்தையும் தனது கவிதைக் கண் கொண்டே பார்க்கின்றார்.

அடுத்ததாக பக்கம் 28 இலுள்ள 'அடையாளங்கள்' என்ற கவிதை மிகவும் எளிமையான சொற்களால் பின்னிப் பிணையப்பட்டுள்ளது. பாமர மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் வாழ்வியல் தத்துவங்களைப் பிரதிபலிப்பதாக இந்தக் கவிதை அமைந்திருக்கிறது.


வியர்வைத் துளிகள் உழைப்பிற்கான அடையாளங்கள்..

பசியும் தாகமும் கஷ்டத்தின் அடையாளங்கள்..

நண்பர்கள் நேசத்திற்கான அடையாளங்கள்..

காத்திருப்புகள் பொறுமையின் அடையாளங்கள்..


என்று குறிப்பிட்டு இறுதியாக முகத்தின் சுருக்கங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் என்று  தனது கவிதையை நிறைவு செய்கின்றார்.

அடுத்ததாக பக்கம் 38 இல் அமைந்துள்ள 'முகமூடி உலகம்' என்ற கவிதையானது சிலர் அணிந்துள்ள முகமூடிகளைக் கழற்றுவதாகவே அமைந்துள்ளது. மேலும் சுயநலமிகளாக வாழ்கின்ற சிலரின் போலி முகங்களை  தோலுரித்துக் காட்டுவதாகவும் இக்கவிதை அமைந்துள்ளது. அத்துடன் மாய உலகின் அற்ப ஆசைகளில் மூழ்கி மனிதத் தன்மைய இழந்து வாழ்பவர்களுக்கு ஒரு சாட்டையடியாக இக்கவிதை அமைந்துள்ளது. கவிதையின் சில வரிகள் இதோ:-


உண்மையாக சிலரோடு உயிராகப் பழகினாலும்

மென்மையாய் சில நேரம் மெதுவாக அணுகினாலும்

தன்மையே இல்லாமல் தரமாக மதிப்பதில்லை..

வசந்தத்தின் வாசலில் வழிமூட முளிக்கின்றார்..

அசைந்திடும் தென்றலுக்கும் அணை போட முயல்கின்றார்..


அடுத்ததாக பக்கம் 44 இல் அமைந்துள்ள 'நேசம்' என்ற கவிதை யதார்த்த வாழ்வை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. 


இருளை நேசி விடியல் தெரியும்..

தோல்வியை நேசி வெற்றி தெரியும்..

மக்களை நேசி மனிதாபிமானம் தெரியும்..

தாயை நேசி அன்பு தெரியும்..

அன்பை நேசி அடிமைத்தனம் தெரியும்..

தந்தையை நேசி உழைப்பு தெரியும்..

உழைப்பை நேசி உயர்வு தெரியும்..

உன்னையே நீ நேசி

உலகம் உனக்கு அழகாய் தெரியும்..


இக்கவிதையில் நேசத்தின் மூலம் நாம் அடையும் பிரதிபலன்கள் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இனிமையான சொல்லாடல்களால் இக்கவிதை ஆக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. 

அடுத்து பக்கம் 55 இல் அமைந்துள்ள 'புன்னகை' என்ற கவிதை மனிதர்களைப் பார்த்துப் புன்னகைக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துவதாய் அமைந்துள்ளது. புன்னகைக்கக்கூட மறந்து போன அவசரமான ஒரு உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புன்னகை பற்றிய கவிதையின் சில வரிகள் இவ்வாறு அமைந்துள்ளது. 


மொழிகளால் நொறுக்கப்படாத பொதுமொழி புன்னகை..

வார்த்தைகளால் இறுக்கப்படாத வாய்மொழி புன்னகை..

உள்ளத்தின் விதைகளை உதட்டில் விரிக்கும் உன்னத மொழி புன்னகை..

பல் இல்லாக் குழந்தைக்கும் அழகு புன்னகை..

உதடுகளை விரியுங்கள்.. புன்னகை புரியுங்கள்..


இக் கவிதை புன்னகையின் பரிணாமங்களை எடுத்துச் சொல்வதாகவே அமைந்துள்ளது. புன்னகையே ஒரு மனிதனின் அழகுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது. இறுக்கமான சூழ்நிலைகளை இலகுவாக்குகிறது. 

ஹிஜாப் எனது கண்ணியம், விடைபெறும் ரமழான், தியாகத் திருநாள், வருடத்திற்கொரு முறை பூக்கும் ரமழானே போன்ற ஆன்மீகம் சார்ந்த கவிதைகளையும் இந்த 'எரியும் நட்சத்திரம்' கவிதை நூலில் காணலாம்.

அடுத்து பக்கம் 69 இல் அமைந்துள்ள 'தியாகத் திருநாள்' என்ற கவிதை நபி இப்றாஹீம் (அலை) அவர்களது தியாகத்தை நினைவுபடுத்துவதாய் அமைந்துள்ளது. 


தியாகத்தின் மகத்துவத்தை உணர்த்தும் இப் பெருநாள்..

நம் தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாள்..

உலகெங்கும் ஒளியேற்றும் தியாகத் திருநாள்..

குர்பானி கொடுத்திடும் சங்கைமிகுத் திருநாளாம்..  

இப்ராஹிம் நபியின் மகத்தான தியாகத்தை

உலகெங்கும் நினைவூட்டும் பெருநாள் இதுவாம்..


அடுத்ததாக பக்கம் 75 இல் அமைந்துள்ள 'மழை நாள்' என்ற கவிதையானது மழையை இரசிக்கும் கவிஞரின் மனதைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. மழையை இரசிக்காத கவிதையுள்ளம் இருக்க முடியாது. மழை தரும் இன்பத்தையும், அழகியலையும் வார்த்தைக்குள் உள்ளடக்கும் திறமை கவிஞர்களுக்கே உரியது. 'மழை நாள்|| என்ற கவிதையின் சில வரிகள் இதோ:- 


மழை வரும் நேரம்

மனதில் இன்பம் ஊறும்

சாலை எங்கும் நீரும்

சாகசம் காட்டி ஓடும்..


மழையை இரசித்தே எனக்கும்

கவி கோர்க்கத் தோணும்..

நித்திரா தேவி என்னை அழைக்க

மை கக்கி, எழுத்துச் சிக்கி,

அடிக்கும் காற்றில்

என் வெள்ளைக் காகிதம்

சிறகு முளைத்துப் பறக்கும்..


அடுத்து பக்கம் 92 இல் உள்ள 'நம்பிக்கையுடன் இவள்' என்ற கவிதையில் உள்ள இரண்டு வரிகள் கவிஞர் என்னுடன் பேசுவதாகவே என் மனதுக்குத் தோன்றுகின்றது. அதாவது அந்தக் கவிதையில் வருகின்ற இரண்டு வரியான 'தயவு செய்து என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்' என்ற வரி கருத்தொன்றைத் தொக்கி நிற்பதாக எனக்கு நினைக்கத் தோன்றுகின்றது. அதாவது ஷஷதயவு செய்து என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். எனது கவிதைகள் பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்கள் சுதந்திரமாகச் சொல்லுங்கள். அது உங்கள்  சுதந்திரம்' என்று ஷஹ்னா ஸப்வான் எம் அனைவருக்கும் சொல்வதாகவே நினைக்கத் தோன்றுகின்றது.

இந்த நூலின் கடைசிப் பகுதியில் தனது தாயாருக்காகவும் 'தாய் மடியைத் தேடுகிறேன்||, 'நீ இல்லாத என் உலகம்', 'நான் தவிக்கின்றேன் தாயே' ஆகிய மூன்று கவிதைகளை இவர் எழுதியுள்ளார்.

பக்கம் 97 இல் அமைந்துள்ள 'நீ இல்லாத என் உலகம்' என்ற கவிதை என் மனதை மிகவும் பாதித்த ஒரு கவிதையாகவே இருக்கின்றது. அதற்குக் காரணம் எனது இருபது வயதுகளில் எனது தாயாரை இழந்த, அந்தத் துயரம் என் மனதை இன்றும் வதைத்துக் கொண்டே இருக்கின்றது. ஷஹ்னாவின் இந்தக் கவிதை என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் எனது தாயாரின் நினைவுகள் மற்றும் எனது தாயாரைப் பிரிந்த மனத் துயரங்களை மொழிபெயர்ப்பதாகவே அமைந்துள்ளது. இக்கவிதையின் சில வரிகளைப் பார்ப்போம்.


பாசமுடன் நீ அளித்த உந்தன் 

ஒற்றைப் பிடிச் சோற்றுகாக

இப்பொழுதும் நான் ஏங்குகிறேன் உம்மா..

நெற்றி வியர்வை சிந்திப் பரிமாறும்

உந்தன் கைப்பக்குவ உணவு

நானறிந்த அமுதத்தின் அசல்தான்

இருந்தும் தவறவிட்டேன் பல நாட்கள்..


இப்படி எத்தனையோ தொலைத்துவிட்ட மனக் கவலைகள் எனக்கும் உண்டு. இங்கே இந்தக் கவிதையோடு என் மனம் மிகவும் ஒன்றித்துப் போய்விட்டது.

இந்தக் கவிதை நூலை வாசிக்கும் அனைவரும் மறைந்த கவியாளுமை ஷஹ்னா ஸப்வானுக்காக கரமேந்திப் பிரார்த்திப்பார்கள் என்பது உறுதி. எல்லாம் வல்ல அல்லாஹ் இவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற மேலான சுவனத்தை வழங்குவானாக என்று நானும் இரு கரமேந்திப் பிரார்த்திக்கின்றேன்!!!


Sunday, February 11, 2024

150. கவிமணி என். நஜ்முல் ஹுசைனின் ''வேறாகா வேர்கள்" சிறுகதை நூல் பற்றிய கண்ணோட்டம்

 கவிமணி என். நஜ்முல் ஹுசைனின்

''வேறாகா வேர்கள்" சிறுகதை நூல் பற்றிய கண்ணோட்டம்


வெலிகம ரிம்ஸா முஹம்மத்

கவிமணி நஜ்முல் ஹுசைன் அவர்கள், பனித்தீ (1992), இனிவரும் நாட்களெல்லாம் (2017), நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள் (2017) ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு கவிதை உலகில் முத்திரை பதித்தவர். கவிமணி நஜ்முல் ஹுசைன் அவர்களின் நான்காவது நூல் வெளியீடாகவே "வேறாகா வேர்கள்" என்ற சிறுகதைத் தொகுதி ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டினால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. 


சிறுகதைகள் பற்றி வாசுதேவன் என்ற இந்திய அறிஞர், சிறுகதை என்பது சிறு கால அளவுக்குள் படித்து முடிக்கப்பட வேண்டியது என்றும், அதன் உருவம் சிறியதாக அமைந்திருக்கும் என்றும் கூறுகிறார். சிறுகதை ஒரு தொடக்கம், மையச் சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. சிறுகதை என்பது வாழ்க்கையின் சாளரமாகும். அதேபோல வாழ்க்கையின் ஒரு பகுதியை, கவலையை மறந்துவிட்டுக் கவனிப்பதாகவே சிறுகதை அமைந்துள்ளது. புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதையின் வடிவம் கதை எழுதுபவரின் மனோ தர்மத்தைப் பொறுத்தது என்று சிறுகதையின் போக்கைப் பற்றி விளக்கியுள்ளார். கதைகள், கதைகூறல் ஆகியவற்றில் கதைக்கரு, கதைமாந்தர், விடய நோக்குநிலை என்பன முக்கிய கூறுகளாக அமைகின்றன.

மனிதத்தை நேசிக்கும் படைப்பாளிகளுக்கு மத்தியில் கவிமணி நஜ்முல் ஹுசைன் ஒரு நயகரா நீர் வீழ்ச்சி என்று நூலின் பின்னட்டையில் நூலாசிரியர் பற்றி இளநெஞ்சன் முர்ஷிதீன் அவர்கள் குறிப்பிடுவது ஈழத்துக் கவிதை வரலாற்றில் கவிஞர் நஜ்முல் ஹுசைன் அவர்கள் தவிர்க்க முடியாத ஒருவர் என்பதை உறுதிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. 

நூலுக்கான அணிந்துரையை இந்திய நாட்டைச் சேர்ந்த பன்னுலாசிரியர், கவிஞர் ஏம்பல் தஜம்மல் முகம்மத் அவர்கள் வழங்கியுள்ளார்கள். அதேபோன்று நூலுக்கான வாழ்த்துரைகளை பிரபல திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், நூலாசிரியர், கலாபூஷணம் பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன் மற்றும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் செயலாளர் கவிஞர் எம்.எஸ்.எம். ஜின்னா ஆகியோரும் வழங்கியுள்ளார்கள். அடுத்து கரிகாற்சோழன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் கலாபூஷணம் மூ. சிவலிங்கம் அவர்கள் 'கவிஞர் எழுதிய கதைகள்' என்ற தலைப்பில் நூலுக்கான நயவுரையை வழங்கியுள்ளார். அதேபோன்று ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் தமிழ் தென்றல் அலி அக்பர் அவர்கள் நூலுக்கான வெளியிட்டுரையை வழங்கியுள்ளார்.

நூலாசிரியரின் கதைகள் யாவும் நேர்கொண்ட இலட்சியப் பார்வையாகவே தோன்றுகின்றன. எல்லாமே மனிதத்தைப் பாடும் கவிதைகளைப் போன்றே உள்ளன. மனிதாபிமானமே பேசு பொருளாக எல்லாக் கதைகளுக்குள்ளும் மின்னுகின்றன. மதத்தின் போதனைகளை, மார்க்கச் சிந்தனைகளை வாசகனிடம் திணிக்க வராமல் அதன் தத்துவார்த்தங்களை கதை மாந்தர்கள் ஊடாகவே சொல்லிப் போகின்றார் என்று நூலாசிரியரின் கதைகள் குறித்து மு. சிவலிங்கம் அவர்கள் தனது நயவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக நூலாசிரியர் வழங்கியுள்ள என்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'நான் சிறுவயதில் வாசித்த நூல்கள், சஞ்சிகைகள் போன்றன நாம் எப்போதுமே பிறருக்கு நன்மை செய்ய வேண்டும், நாங்கள் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதை நிறையவே போதித்துள்ளன. அவையே எனது சிறுகதைகளில் பெரும்பாலான கருப்பொருள்களாக அமைகின்றன. எனது எழுத்துகள் எப்போதுமே எவரையும் தவறான பாதைகளில் அழைத்துச் சென்று விடக்கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறேன். ஒரு சம்பவம் இப்படித்தான் நடந்தது என்பதைவிட இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்ற எனது எதிர்பார்ப்பே சில கதைகளின் கருக்களாகும். கதையைப் படிப்பவர்கள், நாமும் இப்படி வாழ வேண்டும் என்று நினைப்பார்களாயின் அதனை எனது எழுத்தின் வெற்றியாகவே கருதுவேன்' என்று குறிப்பிடுகின்றார்.

"வேறாகா வேர்கள்" என்ற இந்த நூல் 87 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. அவனில்லாமல் நானில்லை, நிலைக் கண்ணாடி, எனக்குக் கிடைக்கும், இப்படி செஞ்சிட்டீங்களே, இதயக் கன்னிக்கு பர்தா போடு, நடந்தது என்ன?, மீண்டும் டயானா, அருமையான என்விலப், வேறாகா வேர்கள், ஏன் சொல்லவில்லை?, தீர்க்கமான முடிவு, யார் அநாதை?, உயிர் காப்பான் தோழன், எந்த சீட் வேண்டும்?, கொடுத்து வைத்தவன், அசோகன் பிறந்தான், புதிய திருப்பம், யாருக்குப் பாராட்டு, உடைந்த சைக்கிள், கொள்ளைக்காரர்கள், உதாசீனம், கல்யாணமாம் கல்யாணம், உழைத்து வாழ வேண்டும் என்ற தலைப்புக்களில் அமைந்த சிறியதும் பெரியதுமான 23 சிறுகதைகள் இந்த நூலில் உள்ளடங்கியுள்ளன.

இனி மேலே தரப்பட்டுள்ள தலைப்புக்களில் உள்ள நூலாசிரியரின் சிறுகதைகளில் சிலவற்றை வாசகர்களது இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.

எனக்கு கிடைக்கும் (பக்கம் 10) என்ற சிறுகதையானது தவறவிடப்பட்ட ஒரு பவுன் தங்க நாணயத்தைப் பற்றிப் பேசுகிறது. வழமையாக சில்லறைகளை யாசகமளிக்கும் நசீர் தவறுதலாக தங்க நாணயத்தை யாசகர் ஒருவருக்குக் கொடுக்கிறான். பிரிதொரு நாளில் அதே வழியாகச் செல்கையில் அந்த யாசகர் நசீரை இடைமறிக்கிறான். அவசரமாகப் போய்க் கொண்டிருந்த நசீர் அவனைத் திட்டிவிடுகிறான். உள்ளம் கேட்காமல் மீண்டும் யாசகம் கொடுக்க முனைகையில் முன்பு கொடுத்த அந்தத் தங்க நாணயத்தை யாசகன் நசீரிடம் திருப்பிக் கொடுக்கிறான். என்றாலும் நசீர் கொடுத்தது கொடுத்தது தான் என்று நினைக்கிறான். வறுமையிலும் நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணக் கருவை மிக அழகாக விளக்குகிறது இந்தக் கதை.

இதயக்கனிக்கு பர்தா போடு (பக்கம் 17) என்ற கதையில் ஒரு பெண்ணினைத்தால் எத்தகைய செயலையும் இலகுவில் சாதிக்க முடியும் என்பதை நிரூபணம் ஆக்கி இருக்கிறார் கதாசிரியர். ரவுடித்தனம் கொண்ட ஒரு இளைஞனாக வலம் வரும் பாரூக் எல்லோரிடமும் கப்பம் கேட்டு மிரட்டி அந்தப் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடாத்தி வந்தான். ஆனாலும் ஊர்ப் பொது வேலைகளுக்கு உதவி செய்வான். கொண்டால் பாவம் தின்றால் போச்சு என்ற கூற்றுக்கிணங்க செயல்பட்டு வருபவன். பெண்களைக் கேலி செய்வதிலும் பாரூக் பின் நிற்கவில்லை. அவ்வாறு கேலி செய்யப்பட்ட பெண்களில் ஒருத்தியான பாஹிரா பர்தா இட்டு தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டாலும் பாரூக்கை மணமுடிக்க விருப்பப்படுகிறாள். இதை அறிந்த பாரூக்கின் மனம் துணுக்குறுகிறது. தன்னை நம்பும் பெண்ணுக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் மனந்திருந்தி பாஹிராவுடன் தன் வாழ்க்கையை மிகவும் அழகாக நடாத்திச் செல்கிறான்.

நடந்தது என்ன (பக்கம் 22) என்ற கதையானது தவறான புரிந்துணர்வின் விளைவை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. தனது தங்கையான நசீமாவுக்கு, நசீர் மிக அழகிய முறையில் திருமணம் செய்து வைக்கிறான். எனினும் ஓரிரு மாதங்களில் அவளது திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. காரணம் மாமியார் - மருமகள் பிரச்சனை என்று சொல்லப்படுகிறது. இறுதியில் நசீராவுக்கு மாமியார் நஞ்சூட்டிக் கொள்ளப்பார்த்ததாக தனது தாய் சொல்லிய போது நசீர பதறிப் போகிறான்;. தங்கையின் விவாகரத்துக்காக விண்ணப்பிப்பதற்குச் செல்லும்போதுதான் தனது வைத்திய நண்பனைச் சந்திக்கிறான். இறுதியில் ஃபுட் பாய்சன் என்பதே 'பொய்சன்' - நஞ்சு என்று தவறாக விளங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து திகைத்து நிற்கிறான். 

உயிர் காப்பான் தோழன் (பக்கம் 46) என்ற கதையில் புகைத்தலால் ஏற்படும் பாதிப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளது. தனது உயிர் நண்பனான ஜெகனின் நோய்த் தன்மை பற்றி பதறிக் கொண்டிருக்கிறான் சுரேஷ். சுரேஷின் புகைப் பழக்கத்தினால் ஏற்பட்டதே ஜெகனின் நுரையீரல் பாதிப்பு என்று வைத்தியர் கூறியதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைகிறான். புகைப்பிடிப்பவரைவிட அதனை சுவாசிப்பவரே அதிகம் பாதிப்படைவர் என்பதை இக்கதை மூலம் மிகவும் தெளிவாக உணர்த்துகின்றார் நூலாசிரியர்.

உடைந்த சைக்கிள் (பக்கம் 71) என்ற கதையானது நடுத்தர பெற்றோரின் பொருளாதார நிலையை கண் முன்னால் கொண்டு வருகிறது. தனது நான்கு வயது மகனுக்கு பதினெட்டாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுக்கிறான் நியாஸ். அது தற்போது உடைந்து உள்ளதால் அதை பழைய இரும்பு சேகரிப்பவரிடம் கொடுத்து ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்கிறான். இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான மின்சார கார் ஒன்றை தனது மகனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது அவனது தற்போதைய தேவையாக இருந்தது. ஆனால் பழைய இரும்பு சேகரிப்பவனோ முந்நூறு ரூபாய் தருவதாக கூறி அந்த சைக்கிளைக் கேட்கிறான். மேலும் தனது மகனுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அவனது நீண்ட நாள் ஆசையை அவன் சொன்னதும் நியாஸின் மனைவி அந்த சைக்கிளை இலவசமாகவே கொடுக்குமாறு தனது கணவனுக்குக் கூறுவதோடு அதைத் திருத்தி அமைக்க ஐந்நூறு ரூபாவையும் சேர்த்தே கொடுக்குமாறும் கூறுகிறார். இரு தரப்பு பிரச்சினைகளை தீர்த்து வைத்து வாசகர்கள் எளிதாக உணரும் வண்ணம் இக்கதை நகர்த்தப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கதையுமே ஒன்றுக்கொன்று வேறுபட்ட கருக்களைச் சுமந்துள்ளமை மிகவும் சிறப்பு அலுப்புப் தட்டாத பாணியும் கதையின் இறுதி முடிவும் அடுத்த கதையை வாசிக்கத் தூண்டுவனவாக அமைந்துள்ளது. நூலாசிரியரிடமிருந்து இன்னும் இன்னும் பல சிறுகதைகளையும் பல படைப்புகளையும் இலக்கிய உலகம் எதிர்பார்க்கிறது. நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!


நூல் - வேறாகா வேர்கள்

நூல் வகை - சிறுகதை

நூலாசிரியரியர் - என். நஜ்முல் ஹுசைன்

வெளியீடு - ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம்

விலை - 650 ரூபாய்



வெலிகம ரிம்ஸா முஹம்மத்


குறிப்பு:- 

இந்த நூலுக்கான பத்திரிகை விமர்சனம் தினகரன் பத்திரிகையின் செந்தூரம் இதழில் இரண்டு கிழமைகளாகத் தொடர்ந்து வெளிவந்தது. 

நூல் விமர்சனத்தின் முதலாம் பகுதி 2024.01.28 செந்தூரம் இதழிலும் இதன் மிகுதிப் பகுதி 2024.02.11 செந்தூரம் இதழிலும் வெளிவந்தது. 




149. 'பூஞ்செண்டு' கவிதை நூல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்

'பூஞ்செண்டு' கவிதை நூல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்                   

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


1975 ஆம் ஆண்டு இலங்கை வானொலி தமிழ்ச் சேவையில் 'பூவும் பொட்டும் - மங்கையர் மஞ்சரி' என்ற நிகழ்ச்சி மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவரே கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்கள். 1977 ஆம் ஆண்டளவில் பன்னூலாசிரியர் மானா மக்கீன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'உதயம்' பத்திரிகையில்தான் இவருடைய கன்னிக் கவிதையான 'பாவி நான் என்ன செய்வேன்?' என்ற தலைப்பில் அமைந்த கவிதை பிரசுரமாகியது.

இவர் 1980 முதல் 1990 வரையான காலப் பகுதியில் தினபதி - சிந்தாமணி பத்திரிகைகளின் ஆசிரியர் பீடத்தில் பத்திரிகையாளராகவும் உதவி ஆசிரியராகவும் அத்துடன் 'ஜனனி' என்ற ஜனரஞ்சகப் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் இருந்துள்ளார். ஜனனி பத்திரிகையில் 'அரிவையர் அரங்கம்' என்ற மாதர் பகுதியின் பொறுப்பாளராகவும் இருந்து வந்துள்ளார்.

1994 இல் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பிரசார அதிகாரியாக (Press Officer) நியமனம் பெற்ற இவர், 2000 ஆம் வருடத்தில் அரசாங்கத் தகவல் அதிகாரியாக (Information Officer) பதவி உயர்வு பெற்றார். அக்காலப் பகுதியில் 'திங்கள்' என்ற மாதாந்த சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும், 'புத்தொளி' என்ற சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். 

தவிர அத் திணைக்களத்தினால் 40 வருட காலமாக தொடர்ச்சியாக வெளிவரும் 'தெசத்திய' என்ற சிங்களச் சஞ்சிகையில் இவரால் சிங்கள மொழி மூலம் எழுதப்பட்ட அரசியல் தலைவர்களின் நேர்காணல் தொடருக்காக 'இன ஐக்கியத்திற்கான ஊடகப் பங்களிப்பு' செய்தவர் என்ற வகையில் அரச கரும மொழித் திணைக்களத்தினால் விருதும் பொற்கிழியும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சுமார் ஐந்து தசாப்தங்களாக இலக்கியப் பணிபுரிந்து வரும் திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்கள் பத்திரிகைகளில் வெளிவந்த தனது கட்டுரைகள் சிலவற்றையும் அத்துடன் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் சிலவற்றையும் ஒன்று திரட்டி, 1997 இல் தனது தலைப் பிரசவ நூலாக 'பண் பாடும் பெண்' என்ற நூலை வெளியிட்டார். 

பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பலரின் தகவல்களை ஒன்று திரட்டி மின்னும் தாரகைகள் என்ற பெயரில் கனதியான ஆய்வு நூலை 2018 ஆம் ஆண்டு வெளியிட்டார். 2020 ஆம் ஆண்டு திதுலன தாரக்கா என்ற பெயரில் மின்னும் தாரகைகள் நூலை சிங்கள மொழியில் மொழி பெயர்ப்புச் செய்து வெளியீடு செய்தார். இந்த நூல் வெளியீடானது சிங்கள மொழியில் இவருக்கிருந்த ஈடுபாடு மற்றும் புலமையினால் மட்டுமே சாத்தியமானது என்று குறிப்பிட்டுக் கூறலாம். 

கவிதை மீது இவர் கொண்ட ஆர்வத்தின் காரணமாக பூஞ்செண்டு என்ற கவிதை நூல் இன்று வெளிவருகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. கவிதைப் பிரியர்களுக்கு இந்த பூஞ்செண்டு நூல் ஒரு விசேட பரிசாக அமையும் என்றே நினைக்கின்றேன்.

பத்திரிகைகளில் மலர்ந்து வெளியான கவிதைப் பூக்களை ஒன்று திரட்டி வெளியிடப்படும் 'பூஞ்செண்டு' என்ற கவிதை நூல் நானிலமெங்கும் நறுமணம் பரப்பி, இலக்கியவாதிகளின் இதயங்களைக் கவர்ந்திழுக்கும் என நம்பலாம். 

இந்த நூலில் நூலாசிரியர் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். கவிதைகளோடு எனக்கு ஏற்பட்ட நட்புக்கு சுமார் 40 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 'உன்னிடத்தில் கவிதை என்னும் பொன் இருந்தால் வாழ்க்கை என்னும் உரைகல்லில் தேய்த்துப்பார்' என்கிறார் உலக மகாகவி அல்லாமா இக்பால் அவர்கள். 

இந்த மாபெரும் உலகக் கவிஞரின் கூற்றுக்கிணங்க இந்த 40 ஆண்டுகளில் அதாவது 1975 ஆம் ஆண்டிலிருந்து அவ்வப்போது கவிதை என்று நான் கிறுக்கியவைகள் ஏராளம் தாராளம். அவற்றில் பெரும் எண்ணிக்கையானவை தினசரி நாளேடுகளிலும் வாராந்த, மாதாந்த பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இலங்கை வானொலி தமிழ்ச் சேவை, முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளிலும் இவை ஒலிபரப்பாகியுள்ளன. 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எனது கவிதைகளை செப்பனிட்டது நான் கடமை புரிந்த தினபதி - சிந்தாமணி பத்திரிகைகள்தாம். படிப்படியாக பெரிய கவிதைகளை எழுத ஆரம்பித்தேன். அக் கவிதைகள் எனது பத்திரிகையுலகத் தந்தை எஸ்.டி. சிவநாயகம் ஐயாவின் நேரடி பார்வையுடன் பிரசுரமாகும் என்று தனதுரையில் கவிதைக்கும் தனக்குமான நெருங்கிய தொடர்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் என்னுயிர் பெற்றோருக்காகவும் மேலும் பலருக்காகவும் என்னால் பாடப்பட்ட கவிதைகள், நூல் வெளியீட்டு விழாக்களில் நான் பாடிய வாழ்த்துக் கவிதைகள், வானொலியிலும் தொலைகாட்சியிலும் சமீப காலமாக நான் பாடிய கவிதைகள் போன்றவைகளே இந்த பூஞ்செண்டை அலங்கரிக்கும் கவிப் பூக்களாகும் என்று நூலில் இடம் பிடித்துள்ள தனது 31 கவிதைகள் பற்றியும் அவர் கூறி நிற்கின்றார்.

பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக மட்டும் நம் கவிஞர் கவிதைகளை எழுதவில்லை. சில கவிதைகளைப் போட்டிகளுக்காகவும் எழுதி பரிசுகளைப் பெற்றுள்ளார்.

இனி இந்த நூலில் இடம் பிடித்துள்ள சில கவிதைகளை வாசகர்களுக்காக எடுத்து நோக்குவது பொருத்தமாக அமையும் என்று நினைக்கிறேன்.

அல்லாஹ்வின் அருள் மழை! என்ற தலைப்பில் அமைந்த முதலாவது கவிதை உலகத்தை படைத்து பரிபாலிக்கும் வல்லவன் அல்லாஹ்வைப் பற்றிப் பேசுகிறது. 

நடப்பவை யாவும் இறைவனின் நாட்டம் என்ற எண்ணப்பாட்டில் வாழ்ந்து  வருபவர்கள் எதிலும் இறைவனின் திருப்பொருத்தத்தைத்தான் தேடுவார்கள். இன்பங்களுக்கு நன்றி கூறியும் துன்பங்களுக்கு பாவ மன்னிப்பு கேட்டும் தம் மனதை சமநிலைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இறை நம்பிக்கையாளர்களுக்கு காணப்படுகிறது. அந்த ஏகனைப் பற்றி பாடிய கவிதையின் சில வரிகள் இதோ:-

இல்லார்க் கிரங்கிடுவோன் அல்லாஹ்

இன்னல்களை போக்குபவன் அல்லாஹ்

கல்லார்க்கும் இரங்குவோன் அல்லாஹ்

கல்லாமையைப் போக்குபவனும் அல்லாஹ்


அன்பை வளர்ப்பவன் அல்லாஹ் - நல்ல

அறத்தினைக் காப்பவன் அல்லாஹ்

தீமையை வெறுப்பவன் அல்லாஹ் - நல்ல

தீர்வினை உடையவன் அல்லாஹ்

2001.06.05 இல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மீலாத் தின விசேட கவியரங்கக் கவிதையாக ஒலிபரப்பான மாதருக்கு விடுதலை வாங்கித் தந்த மாநபிகள்! என்ற தலைப்பில் அமைந்த கவிதை பூஞ்செண்டை அலங்கரித்துள்ள மற்றுமொரு கவிதையாகும்.

உலகத்தாருக்கு ஓர் அருட்கொடையாக வந்தவர்தான் நம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இஸ்லாமிய மார்க்கம் தழைத்தோங்குவதற்கு தன்னாலான சகல தியாகங்களையும் செய்தவர் நம் நபியவர்கள். ஜாஹிலிய்யாக் காலக் கொள்கைகளை விட்டும் மக்களை நல்வழியின் பால் மாற்றியவர். மறுமை நாளிலும்கூட எல்லா நபிமார்களும் யா நப்ஸி என தன்னைப் பற்றி எண்ணும் போது யா உம்மத்தி என தன் கூட்டத்தாரைப் பற்றி மாத்திரம் எண்ணுகின்ற உத்தமர் நபியவர்கள். அத்தகைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றிய கவிதையின் வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.

உலகத்தை உய்விக்க வந்த எங்கள்

உயர்வு நபி நாயகமே உரிமைத் தந்தார்

உலகத்து மாந்தருக்கு: அதனால் இன்று

உவகையுடன் வாழுகின்றார் பெண்கள் இங்கு

கலகத்தை உருவாக்கி மாந்தர் கூட்டம்

கவலையுடன் வாழ்ந்திருந்த அந்த நாளில்

நிலவொத்த குளிர்ச்சியுடன் வந்த அண்ணல்

நிலமெங்கும் பெண் பெருமை கூறி நின்றார்


ஜொலிக்கின்ற விண் மீனாய் மாதர் கூட்டம்

ஜகத்தினிலே இருக்கின்றார் அவர்கள் பெருமை

ஒலிக்கின்ற வேளைதான் உலகம் கூட

ஒப்பற்ற விடுதலையைக் கண்டு நிற்கும்

பலிக்கின்ற பயன் காண்பார் கனவு எல்லாம்

பெண்ணினத்தை பெருமையுறச் செய்தாரென்றால்

சிலிர்க்கின்ற வழியினிலே செம்மல் நபியும்

சீரான கருத்துக்கள் சொல்லி வைத்தார்


தமிழ்நாடு வளரி கவிதை இதழும் டென்மார்க் சிவமீரா அறக்கட்டளையும் 2016 ஆண்டு நடத்திய சிவமீரா கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதையாக மலையகப் பெண்கள் மனம் மகிழ்வதெப் போது? என்ற கவிதை அமைந்துள்ளது.

மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசாத கவிஞர்கள் இல்லை எனலாம். நாட்டின் அந்நியச் செலாவணிக்கு பெரும் துணை புரிகின்ற மலையகத்துப் பெண்கள் என்றும் கௌரவித்துக் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்கள் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் சிலவேளைகளில் தேயிலை பறிக்கும் ஒரு இயந்திரமாகவும் மாத்திரமே பார்க்கப்படுகின்றார்கள் என்பது பெருங்கவலையாகும். மழை, வெயில் என்று பாராது உழைக்கும் அவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முன்னைய காலத்தைவிட தற்காலத்தில் ஒப்பிடும்போது மலையக மக்கள் இன்று தம்மளவில் முன்னேறி வந்திருக்கிறார்கள் என்பது மனதுக்கு மிகவும் மகிழ்வான ஒரு விடயமாக அமைகின்றது. அவர்களைப் பற்றி எழுதப்பட்ட கவிதையின் சில வரிகள் இதோ:- 


மழை பெய்தால் மலையகத்தில் மண் சரிவாம்

தெரிந்த கதை தானிது? தீர்வுதான் எப்போது?

மண் சரிவால் ஒரு கிராமமே புதையுண்டது

கிராமம் மட்டுமா புதைந்தது?

கிராமத்தில் வாழ்ந்த மக்களுமல்லவா

புதையுண்டு போனார்கள்?

விருட்சமாய் வளர வேண்டியவர்கள்

வெறும் விதையாகிப் போனார்களே?

ஐயகோ பொறுக்குதில்லையே

எந்தன் நெஞ்சம்?

சொத்தில்லை சுகமில்லை

சொந்தங்களும் இல்லை

இனி யாருக்கு நிவாரணம்?

யாருக்கு நஷ்ட ஈடு?

கண் கெட்ட பின்னா சூரிய நமஸ்காரம்?


என்று அந்தக் கவிதை மலையக மக்களின் சோகங்களைத் தாங்கி நிற்கின்றது.

அடுத்து 2007.10.30 இல் காலமான தனது தந்தையின் நினைவாக தந்தைக்கோர் கண்ணீர்க் கவிதை! என்ற தலைப்பில் நெஞ்சத்தை உருக்கும் ஒரு கவிதையை நூலாசிரியர் முன்வைத்துள்ளார். இந்தக் கவிதை 2008.02.24 ஆம் திகதி நவமணிப் பத்திரிகையிலும் இடம் பெற்றிருக்கிறது. 

தொடர்ந்து 1999.02.05 இல் கொழும்பு கொம்பனித் தெரு தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நடைபெற்ற தமிழ்மணி மானா மக்கீன் அவர்களின் ஷஷஇலங்கை கீழக்கரை இனிய தொடர்புகள்|| என்ற ஆய்வு நூல் அறிமுக விழாவின் போது நூலாசிரியரினால் பாடப்பட்ட மானா நானா கஸ்தூரி மானா? என்ற தலைப்பில் அமைந்த கவிதையொன்றையும் வாசகர்கள் தரிசிக்க வழி செய்துள்ளார் நூலாசிரியர்.

அடுத்து 2015.04.19 ஆம் திகதியன்று இறையடி எய்திய தனது தாயாரான மர்ஹூமா ஹாஜியானி உம்மு சல்மா ரஷீத் அவர்களின் நினைவாகவும் உம்மாவுக்கோர் கண்ணீர் கவிதை என்ற தலைப்பில் கவிதையொன்றை எழுதியுள்ளார். இந்தக் கவிதை தினகரன் பத்திரிகையின் புதுப்புனல் பகுதியிலும் பிரசுரமாகியுள்ளது.


உதிரத்தைப் பாலாக்கி

சரீரத்தைச் சாறாக்கித்தானே - எமை

ஆளாக்கினீர்கள் உம்மா!

நாம் சூரியனாய்ப் பிரகாசிப்பதற்காய்

சந்திரனாய் தேய்ந்து போனீர்களே நீங்கள்..


பசித்திருந்து, விழித்திருந்து

உம்மா நீங்கள் எமக்காக

பட்ட கஷ்டம் ஒன்றா? இரண்டா?

நாம் எடுத்துச் சொல்ல?


வறுமை எனும் முள்

உம்மைக் குத்திய போதும்

மலராய் எமை

மணக்கச் செய்தீர்கள்!


என்று தாங்கள் மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலும் தம்மைச் சிறப்பாக வளர்த்து ஆளாக்கியமை பற்றி நன்றியோடும் கண்ணீரோடும் நினைவுகூருகின்றார் நூருல் அயின் அவர்கள்.

இந்தக் கவிதைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இது போன்றேதான் எனது தாயாரைப் பிரிந்த சோகம் எனது தொண்டையை இந்த நிமிடம் வரை அடைத்து நிற்கிறது.


மீளாத் துயரில் எமை

ஆழ்த்தி விட்டு - நீங்கள்

மீளாத் துயில் கொண்டதேன் உம்மா! 


என்றே எனக்கும் சத்தமிட்டுக் கேட்கக் தோன்றுகின்றது.

பத்திரிகைத் துறையில் தனக்கு வழிகாட்டியாக இருந்த இரத்தின சிங்கம் ஐயா மற்றும் பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி. சிவநாயகம் ஐயா ஆகியோர் பற்றியும் இருவர் நாமமும் வாழும்! என்ற தலைப்பில் கவிதையொன்றை எழுதியுள்ளார். 

தனது எல்லாக் காரியங்களுக்கும் தன்னுடன் கைகோர்க்கும் தனது பாசமிகு கணவர் நஜ்முல் ஹுசைன் அவர்களுக்காகவும் என் சுவாசமே நீதான்! என்ற தலைப்பில் ஒரு கவிதையை நூலாசிரியர் எழுதியிருக்கிறார். 


என் வாழ்க்கைக்கு வரமானவரே

என் எழுத்துக்கு உரமானவரே


உள்ளத்தால் உயர்ந்தவரே

உம்மளவில் உளரோ யாரும்?

எறும்புக்கும் கருணை காட்டும்

கரும்புள்ளம் கொண்டவரே - உமை

கரம் பிடித்ததில் நானும்

களிப்புற்றேன் தினம் தினம்


என் உயிருக்கு உயிரானவரே!

உள்ளமெல்லாம் நிறைந்தவரே - என்

உதிரத்தில் கலந்தவரே - புவி

அதிரக் கூறுகிறேன்..

நீ தானே! எந்தன் உலகம்

நினைவெல்லாம் நீயே தான்

கனவெல்லாம் நீயே தான்!

மனமெல்லாம் நீயே தான்!


என்று தனது பாசக் கணவருக்காக கவிதை வரிகளில் மிகவும் உருகி நிற்கின்றார்.

2013.09.11 இல் இறையழைப்பை ஏற்றுக்கொண்ட தனது தம்பி மௌலவி அல்ஹாஜ் ரசீத் எம். ராஸிக் அவர்களுக்காகவும் மறுமையில் எங்களின் முதலீடு நீதான் தம்பி! என்ற ஒரு கவிதையை எழுதி கண் கலங்கி நிற்கின்றார் நம் நூலாசிரியர்.


ஒரு தாய்ப் பிள்ளையாக பிறந்தவர் நாம்

ஒரே கருப்பையில் உதித்தவர் நாம்

ஈருடலானாலும் ஓருயிராய் வாழ்ந்தவர் நாம்

இன்று உம் உயிர் பிரிந்ததனால்

வெறும் உயிரற்ற ஜடமாய் நான்


2016.03.20 இல் எனது நண்பி தியத்தலாவை எச்.எப். ரிஸ்னாவின் மெல்லிசைத் தூறல்கள் நூல் வெளியீட்டில் பாடிய வாழ்த்துக் கவிதையையும் இந்த நூலில் சேர்த்துள்ளார் நூலாசிரியர்.

ஊடகத் துறையில் உயர் பதவியில் நீண்ட காலம் பணிபுரிந்த ஒரேயொரு முஸ்லிம் பெண் என நூலாசிரியரைக் கூறுவதில் நம் சமூகம் பெருமைப்பட முடியும். அந்தளவுக்கு ஊடகத் துறைக்கும் இவருக்குமான தொடர்பு மிக நெறுங்கியதாகக் காணப்படுகிறது. இவரது இலக்கியப் பயணமும் ஊடகப் பயணமும் மேலும் சிறப்பாகத் தொடர எனது வாழ்த்துக்கள்!!!

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Sunday, November 6, 2022

148. "நிசாந்தம்" கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

 "நிசாந்தம்" கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


இலக்கிய இரசனை மற்றும் கவியாற்றலுடையவர்கள் அது சார்ந்த நூல்களை வெளியிடுவது வழமையாகும். அந்தவகையில் மக்கொனையூராள் என்ற புனைப் பெயரில் எழுதிவரும் பர்ஹானா அப்துல்லாஹ் தனது கன்னிக் கவிதைத் தொகுதியாக நிசாந்தம் என்ற கவிதை நூலை வெளியிட்டு இலக்கிய வாசகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். இவர் பாடசாலைக் காலத்திலேயே கவிதை, சிறுகதை போன்றவற்றை எழுதுவதில் அதிக ஈடுபாடு காட்டி வந்துள்ளார். அத்துடன் அகில இலங்கை ரீதியிலான தமிழ் மொழித் தினப் போட்டிகளில் கலந்து கொண்டு தனது படைப்புகளுக்காகப் பல சான்றிதழ்களையும் பரிசில்களையும் பெற்று பாடசாலைக்குப் புகழ் சேர்த்துள்ளார். 

பல்வேறு வகையான இலக்கிய வடிவங்கள் இருப்பினும் கவிதை பலரையும் வெகுவாகக் கவர்ந்த ஒரு இலக்கிய வடிவமாகக் காணப்படுகிறது. கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவமாகும். மேலும், மொழியில் உள்ள ஒலியின் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம் ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை உள்ளது. இன்றைய இளந்தலைமுறைப் படைப்பாளிகளையும் இந்தக் கவிதையென்ற இலக்கிய வடிவமே வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஏனைய வகை இலக்கிய வடிவங்களை எழுதுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய நேர காலங்களிலும் பார்க்க ஒப்பீட்டளவில் இந்தக் கவிதைகளை எழுதுவதற்கு குறுகிய நேர காலத்தை எடுத்துக்கொள்ள முடியும் என்பதே அதற்கான காரணமாகவும் இருக்கலாம்.

நிசாந்தம் கவிதைத் தொகுதி 30 கவிதைகளை உள்ளடக்கியதாக அக்கினிச் சிறகுகள் அமைப்பினரின் கை வண்ணத்தினால் வடிவமைக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலின் அட்டைப் படம் கவிதை வாசகர்களைக் கவர்வதாக அமைந்து கவிதை நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றது. நூலாசிரியர் பற்றிய சிறப்பானதொரு அறிமுகத்தை பின்னட்டையில் நூலாசிரியரின் ஆசிரியையான மக்கொனை, இந்திரிலிகொடயைச் சேர்ந்த திருமதி. ஏ.ஏ.என். ஸனீயா சிறப்பாக முன்வைத்துள்ளார். இந்த அறிமுகத்தில் நூலாசிரியருக்கும் கவிதைக்கும் உள்ள ஈடுபாட்டை தான் பாடசாலையில் கற்பிக்கும் காலத்திலிருந்தே கண்டுகொண்டதாகச் சொல்லி வெகுவாகப் பாராட்டியுள்ளார். 

இலக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமான கவிதை, கருத்து வெளிப்பாட்டுக்கான ஒரு முக்கிய ஊடகமாக எல்லாக் காலப் பிரிவுகளிலும் செயல்பட்டு வந்துள்ளது. கருத்துக்கள் கவிதையில் உருப்பெறும் போது அது மக்களின் உள்ளங்களில் உணர்ச்சியும் உயிரோட்டமும் நிறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிந்தனையாளர்கள், தத்துவஞானிகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு சாதனமாகக் கவிதைகளைக் கையாண்டுள்ளனர் என்று அவரது அறிமுகக் குறிப்பில் கவிதைக்கான முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலுக்கான ஆசியுரையை முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்கள் மிகவும் சுருக்கமாக வழங்கியுள்ளார். அத்துடன் கலாநிதி ஏ. அஸ்வர் அஸாஹீம் அவர்களும் ஆசியுரையொன்றை வழங்கியுள்ளார். நூலாசிரியர் எண்ணும் எழுத்தும் அறிமுகப்படுத்திய தன் தந்தைக்கும் தனது தாயாருக்குமே இந்த நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார். 

நூலாசிரியர் தனதுரையில் "சிறுவயது முதல் என்னில் காணப்படும் எழுத்தாற்றல் மூலம் பாடசாலைக் காலப் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து, பல வெற்றிகளைச் சுவீகரித்துக் கொண்டதோடு பத்திரிகை, வானொலி மற்றும் இணையம் ஊடாகவும் எழுத்துக்களுடன் சஞ்சரித்திருந்தாலும் கவிதைப் புத்தகம் வெளியிட வேண்டும் என்ற என்னுடைய நீண்ட பெருங்கனவு இன்று நனவாகக் கண்டதில் அகம் மகிழ்வடைகிறேன்" என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றார்.

இந்தக் கவிதை நூலில் நாம் இலங்கையர், இஸ்லாம் போற்றும் பெண்மை, ஆசிரியர் தினம், எது கவிதை, நிகற்பட ஆட்டம், காண்போம் புதிய உலகம், முள்ளோடுதான் ரோஜா, வேண்டாம் கொரோனா, மாறுவோம் மாற்றுவோம், மனிதா அது போதும், உயிர் பிரியும் அந்த நொடி, உயிரெழுத்துக் கவி, புத்தகங்களை காதல் கொள், தேடல், வாழ்க்கைப் படிகள், இளமையில் வறுமை, யார் அழகு, வியாபாரமா, கையர், செய்ந்நன்றி, வாழ்க்கைப் பாடம், தமிழ், செகத்திலே நிலவாய், வா..தோழா..வா.., அன்பினால், விரைவுணவும் விபரீதமும், அன்பு எதனாலானது, நீயும் ஜெயம் பெறுவாய், மனித உலகம் தவிக்கிறது, ஆதலால் தாமதம் வேண்டாம் ஆகிய தலைப்புக்களில் நூலூசிரியர் கவிதைகளை எழுதியுள்ளார். இந்தக் கவிதைகளில் இரசனைக்காகச் சில கவிதைகளை எடுத்து நோக்குவோம்.

காணும் காட்சிகள் யாவற்றையும் கவிஞரின் மனக்கண் படம் பிடித்துவிடுகின்றது. பின்னர் அது கவிதையாக உருப்பெறுகிறது. இயற்கையாகக் காணக் கிடைக்கின்ற அத்தனை அழகுகளையும் இதுதான் கவிதையோ என எண்ணுகிறார் கவிஞர். பின்பு இவற்றையெல்லாம்விட குழந்தையின் குறும்புகளே கவிதையெனக் கூறி நிற்கின்றார். பக்கம் 11 இல் இடம்பிடித்துள்ள எது கவிதை? என்ற கவிதையின் அழகான சில வரிகள் இதோ:-


மலர்ப்பொழில் எழிலினில் 

என்னை மறந்தேன்.. 

மலர்களே கவிதையென 

நான் இருந்தேன்..


காற்றின் தழுவலில்

எனை மறந்தேன்..

காற்றுதான் கவிதையென 

நான் இருந்தேன்..


வானில் பல நிறம் பார்த்து 

என்னை மறந்தேன்..

வானமே கவிதையென 

நான் இருந்தேன்..


குழந்தையின் அழைப்பினில் இவை

அத்தனையும் மறந்தேன்..

குழந்தையே கவிதையென 

நான் உணர்ந்தேன்..


மனிதம் படிப்படியாக அருகிக்கொண்டு வருகின்ற இக்கால கட்டத்தில் நாம் எவ்வாறெல்லாம் சிறந்த பண்புகளைப் பேணி நடக்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வைக்கிறது பக்கம் 13 இல் அமைந்துள்ள காண்போம் புதிய உலகம் என்ற தலைப்பில் அமைந்துள்ள கவிதை. இக்கவிதை மூலம் நம்மிடம் இருக்கின்ற எத்தனை சிறந்த இயல்புகளை நாம் இழந்து நிற்கின்றோம் என்ற ஆழமான வலியையும் ஊடுருவ வைக்கின்றது கவிஞரின் பின்வரும் வரிகள்..


பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் 

நல்லுள்ளங்களுடன் இணைவோம் 

நம் வாழ்வு சிறக்கும்..


வஞ்சனை செய்வோருக்கும் 

வந்தனம் செய்வோம் 

பசிக்கின்ற வயிற்றுக்கு 

பட்சணம் கொடுப்போம்..


அயல்வீட்டாரை 

அன்போடு பார்ப்போம்..

உறவினருடன் 

ஒத்தாசையாய் இருப்போம்..


பெண்ணியம் என்பது யாது என்று பலரும் கேட்கும் கேள்விக்கு பக்கம் 14 இல் அமைந்துள்ள முள்ளோடுதான் ரோஜா என்ற கவிதையின் வரிகள் மிக அழகான பதிலாக அமைந்திருக்கிறது. கால மாற்றங்களுக்கு ஏற்ப கலிகாலத்தில் கால் வைத்து நொந்து போவதல்ல பெண்ணியம். மாறாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கீழுள்ள கவிதை வரிகள்; மூலம் கவிஞர் மிகவும் அருமையாகக் கூறிச் செல்கின்றார்.


வட்டத்துக்குள் வாழ்வதால் - நீ 

கிணற்றுத் தவளையாகிட முடியாது 

அந்த வட்டம்தான் - உனை

பல வாட்டங்களில் இருந்து 

காக்கும் காவலரண்.. 


நாணம் உனக்கு 

வேலியாக வேண்டும்.. 

நாணயம் உனக்கு 

தோழியாக வேண்டும்..

இஷ்டப்படி வாழ்வதில் கிடைப்பது 

இன்பங்கள் இல்லை 

இனியோர் சொல் கேட்டொழுகுதல் 

இன்பத்தின் எல்லை..


பக்கம் 20 இல் அமைந்துள்ள புத்தகங்களைக் காதல் கொள் என்ற கவிதையானது புத்தகங்களோடு வாழும் இன்பத்தை இயம்பி நிற்கின்றது. தனிமையில் சிறந்த துணையாகவும் மனசு கணத்த பொழுதுகளில் தாய் மடியாகவும் எமைத் தாங்கும் நூல்கள் இருள் சூழ்ந்த இரவுகளைக் கூட விளக்காக மாறி ஜொலிக்க வைக்கும் என்கிறார் கவிஞர்.


புத்துலகம் உன் வசமாகும்.

இத்தலத்தில் 

இனிமைகள் கரம் சேரும்..

உதயம் உன் மன வானில் 

காட்சியாகும்..

இதயம் தினம் புதுமைகளுக்கு 

சாட்சியாகும்..

புத்தகங்களைக் காதல் கொள்..


நினைவுகளில் எல்லாம் 

கார்கால மழை தூறும்..

கனவிலும் கவிதைகள் 

ஊர்கோலம் போக வரும் 

புத்தகங்களைக் காதல் கொள்..


மனசு கனத்த பொழுதுகளில்

தாய் மடியாய் மகிழ்விக்கும்..

புதுசு புதுசாய் எண்ணங்களை

சேய் போல ஒப்புவிக்கும்

புத்தகங்களைக் காதல் கொள்..


இவ்வாறு தனது கன்னிக் கவிதைத் தொகுதி மூலம் கவிதை வாசகர்களுக்கு விழிப்புணர்வுக் கவிதைகள், நாட்டுப் பற்று மற்றும் தமிழ்ப் பற்றுடன் கூடிய கவிதைகள், ஆன்மீகம் சார்ந்த கவிதைகள் போன்றவற்றை வழங்கி, விருந்து படைத்த கவிஞர் பர்ஹானா அப்துல்லாஹ் பாராட்டுக்குரியவர். எதிர்காலத்தில் மேலும் பல காத்திரமான கவிதை நூல்களை கவிதைப் பிரியர்களுக்கு வழங்குவார் என்ற நம்பிக்கையுடன் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்!!!


நூல் - நிசாந்தம்

நூல் வகை - கவிதை

நூலாசிரியர் - பர்ஹானா அப்துல்லாஹ்

வெளியீடு - அக்கினிச் சிறகுகள்




வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Saturday, December 25, 2021

147. "மொட்டுக்களின் மெட்டுக்கள்" சிறுவர் பாடல்கள் நூல் திறன் நோக்கு

 "மொட்டுக்களின் மெட்டுக்கள்" சிறுவர் பாடல்கள் நூல் திறன் நோக்கு

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட ஒருவர். இவர் எழுதியுள்ள "மொட்டுக்களின் மெட்டுக்கள்" என்ற சிறுவர் பாடல்கள் அடங்கிய நூல் 70 பக்கங்களில் வெளிவந்துள்ளது. எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்த நூலை வெளியீடு செய்துள்ளது. கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் ஏற்கனவே 2015 இல் மௌனத்தின் சத்தங்கள் என்ற கவிதை நூலை வெளியிட்டு இலக்கிய உலகில் தனக்கான சிறந்த ஒரு இடத்தைத் தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் தனது மாணவப் பருவத்திலேயே கவிதை எழுதத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து பிரதேச போட்டிகள் தொடக்கம் பல்கலையில் நடைபெறும் இலக்கியப் போட்டிகள் வரை இத்துறையில் பல பாராட்டுக்களையும் பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளார்;. அத்துடன் 2017 இல் ஏறாவூர்ப் பிரதேச செயலக கலாசார பேரவையின் கலாசார கீதம் இயற்றியமைக்காக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு இவருக்கு இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. 

பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் கே. நௌஷாத் பற்றி எழுதிய குறிப்பொன்றில் "சிறந்த புரட்சிக் கவிஞராக மிளிர்ந்த புரட்சிக் கமால் பிறந்த ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், புரட்சிக் கமால் பரம்பரையின் இன்றைய கால கட்டத்து இளந்தலைமுறைக் கவிஞர்" என்று இவருக்கு மகுடம் சூட்டியுள்ளார். அத்துடன் ஏறாவூரைச் சேர்ந்த மறைந்த கவிஞர் அனலக்தர் அவர்கள் நௌஷாத் பற்றி எழுதிய குறிப்பொன்றில் "அப்பழுக்கில்லாமல் என் அடிச் சுவட்டைப் பின்பற்றி, மாணவரை சமூக மயப்படுத்தும் மகத்தான சேவையை நௌஷாத் செய்து வருகின்றார். அத்துடன் கலையிலக்கியப் போட்டிகளில் மாணவரை வழிப்படுத்தி, மாகாண - தேசிய மட்டங்களில் துலங்கச் செய்துள்ளமையும் பாராட்டுக்குரியது" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மொட்டுக்களின் மெட்டுக்கள் என்ற இந்த சிறுவர் பாடல்கள் நூலில் 55 சிறுவர் பாடல்கள்  உள்ளடங்கியுள்ளன. இந்தப் பாடல்களுக்குப் பொருத்தமான சித்தரங்களையும் இந்த நூலில் சேர்த்துள்ளார். சிறுவர் பாடல்கள் அனைத்தும் சிறுவர்களின் மனதைக் கவரும் வகையில் எளிய நடையில் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதானது சிறுவர்களுடன் இவருக்குள்ள ஈடுபாட்டையும் இத்துறையில் இவருக்குள்ள புலமைத்துவத்தையும் எடுத்துக் காட்டுவதாகவே உள்ளது. இத்துறையில் இவருக்குள்ள விரிந்த சிந்தனை, பரந்த அறிவு, மொழியாற்றல், வாசிப்பு மூலமான தேடல் போன்றவையே இவ்வகையான சிறந்த பாடல்களை இவர் எழுதக் காரணமாக அமைந்துள்ளன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அத்துடன் இவரது தந்தையும் ஒரு கவிஞராக இருந்;துள்ளார். 

சிறுவர் படைப்புகளை இலக்கியவாதிகள் எல்லோராலும் இலகுவாக எழுத முடியாது. ஏனென்றால் இதற்கென்று சிறுவர்களின் மனப்பாங்குகளையும் விருப்பங்களையும் நன்கு தெரிந்து வைத்துள்ள ஒரு அலாதியான, மிகவும் மென்மையான மனம் இருக்க வேண்டும். அவை இந்த நூலாசிரியருக்கு வாய்த்திருக்கிறது. இவர் கலைமானிப் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரி மட்டுமல்லாமல் தமிழ்ப் பாடம் கற்பிக்கும் ஓர் ஆசிரியருமாவார். மாணவர்களுக்கு மத்தியில் சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ்ப் பாடத்தைச் சிறப்பாகக் கற்பித்து நற்பெயரைப் பெற்றுள்ளார். எனவேதான் இவரால் அழகிய தமிழில், சிறந்த சொற்றொடர்களைப் பயன்படுத்தி சிறந்த படைப்புகளை சர்வ சாதாரணமாக முன்வைக்க முடிகிறது. 2019 ஃ 2020 ஆம் ஆண்டுக்கான அரச சாகித்திய விருது வழங்கல் விழாவில் மொட்டுக்களின் மெட்டுக்கள் என்ற இந்த நூலுக்கு சான்றிதழ் கிடைத்திருப்பதும் மகிழ்ச்சியான ஒரு செய்தியாகும். 

இந்த நூலில் உள்ளடங்கியுள்ள சிறுவர் பாடல்களைப் பொருத்தமட்டில் சிறுவர்களுடன் மிகவும் தொடர்பான தலைப்புகளில் அமைந்த பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் பொம்மை, மலர்த் தோட்டம், மரம் நடுவோம், ஓடி விளையாடு, காலைக் காட்சி, காக்கை, உண்டியல், பூனை, அப்பா, புகைவண்டிப் பயணம், வானவில் ஜாலம், ஆசான் ஆகிய தலைப்புக்களில் அமைந்துள்ள பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். 

இனி நூலில் உள்ள சில பாடல்களை இரசனைக்காக எடுத்துக்கொள்வோம்.

புத்தகம் படிப்போம் (பக்கம் 15) என்ற பாடல் புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசுகிறது. கால மாற்றங்களுக்கு ஏற்ப இன்று வாழ்க்கையும் மாறிவிட்டது. புதுமைகளோடு பயணித்துக் கொண்டு பழமையானவற்றைக் கைவிடும் இச்சூழலில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அருகிப் போய்விட்டது. ஆனாலும் அறிவியல் கண்டுபிடிப்புகள் தராத வாசிப்பின் இரசனையை புத்தகங்களே நிறைவாகத் தந்துவிடுகின்றன. புத்தகத்தை ஏந்திய படியும் புத்தகத்துக்கு மாத்திரமே உரித்தான வாசனையுடனும் வாசிக்கின்ற போதுதான் வாசிக்கும் விடயங்கள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்துவிடுகின்றன என்று பின்வரும் வரிகள் மூலம் கவிஞர் நௌஷாத் வாசிப்பின் அவசியத்தை முன் வைக்கின்றார். 


தினம் தினம் புத்தகம் படிப்பதனால்

சிறந்த அறிவும் ஆற்றலும் பெருகிடுமே

நினைவில் அதனை நிலையாய் பதிப்பதனால் 

நல்ல பழக்கங்கமும் வாழ்வில் வந்திடுமே


புவி மெச்ச கணிப்பொறி இலக்கியங்கள் 

புத்தம் புதிதாய் வளர் அறிவியல்கள்

கவி தரும் ஆற்றல் சிறுகதைகள்

கலந்து பருக்கும் நல்ல நூல்கள்


இயற்கையின் அழகியலோடும் வனப்போடும் மிக நெருங்கியது மலர்களே ஆகும். பூக்களின் அழகு யாரையும் கட்டிப் போட்டுவிடும். வர்ண ஜாலங்கள் மனதை வசீகரிக்கும். பூக்களைப் பற்றி எழுதாத எழுத்தாளர்களே இல்லை. சிறுவர்களை மிகக் கவர்ந்த பூக்களாலும் பூக்களோடு கொஞ்சிக்குலாவும் வண்ணத்துப் பூச்சிகளாலும் அழகுறுகிறது மலர்த் தோட்டம். அவ்வாறான மலர்களின் அழைகைப்பற்றி மலர்த் தோட்டம் (பக்கம் 18) என்ற பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 


அழகு மலர்கள் சிரித்து

மகிழும் கூட்டம்

உலகு விரும்பும் நிறங்கள்

நிறைந்த தோட்டம்


புலர்ந்த பொழுதில் வண்டின்

இசை பாட்டும்

இழந்த இன்பம் எல்லாம்

இணைந்து கூட்டும்


இறைவன் படைப்பில் எல்லாமே அழகுதான் என்பதற்கு புத்திமதி (பக்கம் 30) என்ற பாடல் சிறந்த எடுத்துக்காட்டு. அதாவது கைகள் இல்லாத குருவி தன் கூட்டினை எவ்வளவு அழகாகக் கட்டிவிடுகிறது? சிறுவயதில் இரசித்த இத்தகைய விடயங்கள் இப்பொழுது நினைக்கையில் மிக மிக வியப்பாக இருக்கின்றது. குருவியின் புத்திமதியை ஏற்று குரங்கு தனக்கான இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளப் புறப்படுவதாக நிறைவுறுகிறது புத்திமதி என்ற பின்வரும் பாடல். 

குருவி ஒன்று மரத்திலே.. கூடு கட்டி வாழ்ந்தது.. குடும்பமாக குஞ்சுகள்.. கூட்டினுள்ளே இருந்தன.. மழையில் நனைந்த குரங்கு ஒன்று.. மரத்தின் அடியில் நின்றது.. மரத்தின் கூட்டில் குருவிகள்.. மகிழ்ந்து வாழக் கண்டது.. அலகினாலே அருமைக் கூடு.. அமைத்து நாங்கள் வாழ்கிறோம்.. அதேபோல நீயும் உனக்கு.. கூடு கட்டி வாழுவாய்.. கையில்லாத நாங்களோ.. களிப்புடனே இருக்கிறோம்.. கையிருந்தும் கவலை ஏன்.. என்று குரங்கைக் கேட்டது.. குருவி சொன்ன யோசனைகள்.. குரங்கின் உள்ளம் தாக்கவே.. உருகி தலை நிமிராமல் வீடமைக்கப் போனது.

உண்டியல் (பக்கம் 38) என்ற பாடல் சேமிப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கின்றது. சேமிப்பின் ஸ்திரத் தன்மையை குழந்தைகளிடம் ஏற்படுத்துவதற்கு உண்டியல் மிகப் பிரதானமாக உள்ளது. சிறுவயதில் இருந்தே சேமிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டுவதற்கு உண்டியல் மிகச் சிறந்த உதாரணம். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதற்கேற்ப வளர்ந்த பிறகும் கையிருப்பை சேமிப்பதற்கான வழி வகையைக் கூறுவதாக கீழுள்ள பாடல் வரிகள் அமைந்திருக்கின்றன.


உண்டியலாம் உண்டியல்

உடைபடாத உண்டியல்

உண்டு குடித்து மிகுதி போக

சேர்த்து வைக்கும் உண்டியல்


வாழ்க்கையில் எத்தகைய உயரத்துக்குப் போனாலும் அதைக் கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன் ஆசிரியர்கள்தான். நம்மையெல்லாம் ஏற்றிவிட்ட ஏணியாகி, நம்மை ஆளாக்கிய அவர்களை வாழ்வின் கடைசி எல்லைவரை மறந்து விடவே கூடாது. ஆசிரியர்களின் ஆசியால் உயர்ந்த பல மாணவச் செல்வங்கள் இருக்கிறார்கள். மாதா பிதா குரு தெய்வம் என்ற கூற்றுக்கிணங்க ஆசிரியர்கள் எம் வாழ்வு எனும் மரத்தின் மிக முக்கியமான வேர்கள்.; ஆசிரியர்கள் பற்றி ஆசான் (பக்கம் 58) என்ற பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.


அன்னை தந்தை இருவரும்

இறைவன் தந்த அருளதாம்

அடுத்ததாக ஆசானும்

ஆண்டவனின் வரமதாம்


அறிவுக் கண்ணைத் திறக்கவே

அரிச்சுவடி தந்தவர்

விரிவுபட்ட உலகத்தை

விளங்கிக் கொள்ளச் செய்தவர்


கைத் தொலைபேசிக்கு அடிமையாகியுள்ள குழந்தைகளை மீட்டெடுத்து, அவர்களது வாசிப்பு ஆற்றலை மேம்படுத்த இவ்வகையான காத்திரமான நூல்களை சிறுவர்களுக்கு வாங்கிக் கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பது இக்காலத்தின் தேவையாகவே உள்ளது. கவிஞர் கே. நௌஷாத்துக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துகள்!!!


நூல் - மொட்டுக்களின் மெட்டுக்கள்

நூல் வகை - சிறுவர் பாடல்கள்;

நூலாசிரியர் - ஏரூர் கே. நௌஷாத்

தொலைபேசி - 0778205177

முதற் பதிப்பு - 2019

வெளியீடு - கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்


வெலிகம ரிம்ஸா முஹம்மத்

146. "அடிமன அதிர்வுகள்" கவிதை நூல் ஒரு விமர்சன நோக்கு

"அடிமன அதிர்வுகள்" கவிதை நூல் ஒரு விமர்சன நோக்கு


ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவரே கலாபூஷணம் எம்.எச்.ஏ. அப்துல் ஹலீம் அவர்கள். டிப்ளோமா முடித்து, பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியரான இவர் பல வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றிய அனுபவத்தைக் கொண்டவர். 

இளமைப் பருவத்திலிருந்தே இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு காட்டிவந்த எழுத்தாளர் கலாபூஷணம் எம்.எச்.ஏ. அப்துல் ஹலீம் கல்வி, மொழிப் பற்று, அரசியல், ஆன்மீகம், இலக்கியம் போன்ற விடயப் பரப்புகளில் எழுதி வந்த தனது ஆக்கங்களை தேசிய பத்திரிகைகளில் பல வருடங்களாக களப்படுத்தி வந்துள்ளார். பல்வேறு அமைப்புக்களின் மூலம் இதற்காகப் பல விருதுகளையும் பெற்று, பலரது பாராட்டுக்களையும் குறைவில்லாமல் பெற்றுள்ளார். தனது படைப்புககளை நூலாக வெளியிடும் முயற்சிகளில் அண்மைக் காலமாக இவர் ஈடுபட்டு வருகிறார். இந்தவகையில் இவரது மூன்றாவது நூலாக வெளிவந்திருப்பது அடிமன அதிர்வுகள் என்ற இந்தக் கவிதைத் தொகுதியாகும். 58 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இந்த நூலை காதியார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

தனது உடன்பிறப்பான மர்ஹும் எம்.எச்.ஏ. செய்னுலாப்தீன் அதிபர் அவர்களுக்கு இந்த நூலை நூலாசிரியர் சமர்ப்பணம் செய்துள்ளார். மண்ணறையில் வாழும் தனது சகோதரனுக்காக நூலாசிரியர் அடிமன அதிர்வுகள் என்ற இந்த நூலில் எழுதியுள்ள சமர்ப்பணக் கவிதை மனதை ரணப்படுத்திச் செல்கிறது. 

அடிமன அதிர்வுகள் என்ற கவிதைத் தொகுதிக்கான அணிந்துரையை பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் வழங்கியுள்ளார். அவர் தனதுரையில் "அடிமன அதிர்வுகள்" என்ற கவிதைத் தொகுதி பேசு பொருள்கள் பலவற்றையும் பேசாப் பொருள்கள் சிலவற்றையும் கொண்டு அமைந்துள்ளது. பேசு பொருள்கள் என்ற விதத்திலே தமிழ் மொழி, இயற்கை, முதியோர் நிலை, காதல் முதலியன சார்ந்த கவிதைகளைக் குறிப்பிடலாம். பேசு பொருள்களாயிருப்பினும் அவற்றினூடே சில புதுமைகளை வெளிப்படுத்தியுமுள்ளார். தமிழ் மொழி பற்றி அமைந்த கவிதைகளுடாக தமிழிலக்கிய வரலாறு - முக்கியமான நூல்கள் பலவும் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் நவீன கவிதைத் தோற்றம் பெற்ற காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் பற்றிப் பாடாதவரில்லை என்றே குறிப்பிடலாம். கிழக்கிலங்கையைப் பொறுத்தளவிலே நீலாவணன், திமிலைத்துமிலன், அண்ணல் போன்ற மேலும் பலரும் தமிழ்மொழி பற்றிப் பாடியிருப்பினும் அவற்றினூடே இவ்வாறு தமிழிலக்கிய வரலாறு பேசப்படவில்லை..|| என்று குறிப்பிட்டுள்ளார். நூலுக்கான காத்திரமானதொரு பின்னட்டைக் குறிப்பை கிழக்குப் பல்கலைக்கழக, சிரேஷ்ட விரிவுiராளர் ஏ. ஜாபர் ஹுசைன் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

ஆன்மீகம் சார்ந்தவை, மொழிப் பற்று, இயற்கை மீதான காதல், வறுமையின் கொடுமை, முதியோர் நிலை, சமூக நிலை, காதல் கவிதைகள் ஆகிய கருப்பொருட்களில் கவிஞருக்கான கவிதை வெளி, நூலெங்கும் பறந்து விரிந்து செல்கின்றன. 

நூலிலுள்ள என் இறைவன் (பக்கம் 01) என்ற முதலாவது கவிதை உலகத்தைப் படைத்துப் பரிபாலித்து இயங்கச் செய்யும் இறைவனின் வல்லமை பற்றிப் பேசுகின்றது. கோள் மண்டலத்தைப் படைத்து அவற்றை நேரம் பிசகாமல் சீராக இயக்குபவன் இறைவன். நாம் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து எமக்கும், கண்ணுக்குப் புலப்படாத ஏனைய உயிரினங்களுக்கும் உணவளிக்கக் கூடியவன் இறைவன். மிக அழகாக எழுதப்பட்டுள்ள இக்கவிதையின் சில வரிகள் பின்வருமாறு:


அந்தரத்திற் கோள்களினை

எந்தவோர் இணைப்புமின்றி

பந்து போற் சுழல வைத்து

பாலனம் செய்கிறவன்


அற்பத் திரவத்தால்

ஆண் பெண்ணை உருவாக்கி

அரவணைத்து இரட்சிக்கும்

அன்பின் வடிவமவன்


கல்லிடைத் தேரை முதல்

கருப்பைச் சிசு வரையில்

எல்லாவுயிர்களுக்கும்

இரணம் கொடுக்கிறவன்


எம்மையெல்லாம் வாழ்த்தி வாழ வைத்திருக்கிறது நம் தமிழ் மொழி. சங்க கால இலக்கியம் தொட்டு இக்காலம் வரை எத்தனையெத்தனை எழுத்தாளர்கள் பல்வேறு விதமான படைப்புகளைத் தந்தாலும் எதிலும் புதுமையோடு இயைந்திருக்கக் கூடியது தமிழ் மொழி. இயல், இசை, நாடகம் என்று மூன்று துறைகளிலும் மாயாஜாலம் செய்து எம்மை மெய் சிலிர்க்க வைக்கும் தமிழைப் பற்றியே கன்னித் தமிழ் மொழி (பக்கம் 05) என்ற கவிதை பேசுகிறது.


கல்தோன்றி மண்தோன்றாக்

காலத்தின் முன்தோன்றி

முதல் இடை கடையென

முச்சங்க மமைத்து

இயலிசை நாடகமாய்

இனிதே வளர்ந்த மொழி

செந்தமிழாம் நாம் பேசும்

கன்னித் தமிழ் மொழி


பெண்ணழகைப் பற்றிப் பாடாத ஆண் கவிஞர்கள் யாரும் இருக்க முடியாது. பெண்களின் விழிகள், வதனம், பற்கள், இதழ்கள் என்று எத்தனைப் பேர் எவ்வாறு எழுதினாலும் பெண்ணின் அழகை ஒவ்வொரு கவிஞரும் தத்தமது இரசனைக்கு ஏற்ப சொல்வதில் பெண்ணின் பெருமை அதிகரிக்கிறது. சுந்தரத் தமிழணங்கு (பக்கம் 11) என்ற கவிதையின் பின்வரும் வரிகளும் இதழோரப் புன்னகையைத் தோற்றுவிக்கிறது. 


பாளை பிளந்து பளிச்சிடும்

பல்லழகுப் பாவையவள்

சொல்லாடச் செல்வோர்க்கு

கல்லாடங் கற்பிப்பாள்


வேல் விழியிரண்டும்

வில் வளைவுப் புருவங்களும்

ஏகலைவன் விரல் கொடுத்த 

மா பாரதக் கதை கூறும்


சங்குக் கழுத்துடன்

அங்கந் தழுவிச்

சங்கமமாகி விட்டால்

சங்க காலப் பெருந்திணையாம்


இவர் ஏற்கனவே சுவனத்து மலர்கள் (சிறுகதைத் தொகுதி), பெண்ணியம் (கவிதைத் தொகுதி), ஆகிய இரண்டு நூல்களையும் வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏறாவூர்ப் பிரதேச செயலகம் இந்த நூலாசிரியரைப் பாராட்டி கௌரவித்துள்ளது. தனது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளுக்காக பிரதேச, மாவட்ட, மாகாண மட்டங்களில் பல பரிசில்களையும் பெற்றுள்ள இவருக்கு நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம். இவரது இலக்கியப் பணிகள் தொடரவும் இவர் நீடூழி வாழவும் என்றென்றும் எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்!!!


நூல் - அடிமன அதிர்வுகள்
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - கலாபூஷணம் எம்.எச்.ஏ. அப்துல் ஹலீம்
தொலைபேசி - 0775150127
வெளியீடு - காதியார் பதிப்பகம்
விலை - 200 ரூபாய்